சென்னையில் பேரணி, போராட்டம் நடத்த தடை... பிப்.12 வரை யாருக்கும் அனுமதி இல்லை
சென்னை: சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட எந்த இடத்திலும் பேரணியோ, போராட்டமோ நடத்துவதற்கு அனுமதி கிடையாது என மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த தடை உத்தரவு பிப்ரவரி 2-ம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்றும், அதுவரை யாருக்கும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படாது என அவர் கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், காவல்துறையின் இந்த திடீர் நடவடிக்கைக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
Exclusive: யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல... ஐ.யூ.எம்.எல். அபுபக்கர் எம்.எல்.ஏ. ஓபன் டாக்
பேரணி
நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக் கோரி இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என பல தரப்பினரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்திலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. திமுக தலைமையில் ஒருங்கிணைந்த கட்சிகள் பேரணி நடத்தியதோடு அடுத்ததாக கையெழுத்து இயக்கம் தொடங்குவது என்றும் முடிவெடுத்துள்ளன. இந்த சூழலில் காவல்துறை தரப்பில் இருந்து வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பிப்ரவரி 12 வரை
சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட எந்த இடத்திலும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வரும் பிப்ரவரி 12-ம் தேதி மாலை 6 மணி வரை அனுமதி தரப்படாது என காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்களில்(வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே) கூட போராட்டம் நடத்த கூடாது என விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார். ஒரு வேளை தவிர்க்க முடியாத வகையில் யாரேனும் நிகழ்ச்சி நடத்தியே தீர வேண்டும் என்றால் 5 நாட்களுக்கு முன்பு காவல்துறையிடம் கடிதம் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
காவல்துறை உத்தரவை மீறி அனுமதியின்றி யாராவது போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்கள் மீது தமிழ்நாடு சிட்டி போலீஸ் ஆக்ட் 41-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நேற்று மாலை 6 மணி முதலே அமலுக்கு வந்துவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. திடீரென்று 15 நாட்களுக்கு போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் பற்றி விளக்கப்படவில்லை.
அதிருப்தி
திமுக தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் பிப்ரவரி 2-ம் தேதி முதல் பிப்ரவரி 8-ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது என முடிவெடுத்துள்ள நிலையில், காவல்துறையின் இந்த திடீர் அறிவிப்பு அதற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி தெரியவில்லை. இருப்பினும், போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என்கிற முடிவை காவல்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.