மருத்துவமனையில் திரண்டு வந்த காவலர்கள்.. நெகிழ்ந்து போன சென்னை கமிஷ்னர் சங்கர் ஜிவால்!
சென்னை : நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் குணம் அடைந்த நிலையில் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு காவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விரைவில் அவர் பணிக்கு திரும்ப உள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் அக்டோபர் 14ஆம் தேதி காலை சங்கர் ஜிவால் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தனது அறையில் வழக்கமான அலுவலை கவனித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து அவருடைய சொந்த காரில் சங்கர் ஜிவாலை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கேரளாவில் கனமழை.. வெள்ளம்.. இதுவரை 26 பேர் உயிரிழப்பு.. ராணுவம் மீட்பு பணிகளில் தீவிரம்
டிஸ்சார்ஜ்
இந்தநிலையில் அவரது உடல் நிலை சீராக உள்ளது. விரைவில் அவர் தனது அன்றாட பணிக்குத் திரும்புவார் என அப்போலோ மருத்துவக் குழு தெரிவித்து இருந்தது. இதையடுத்து இன்று (அக்.17) மாலை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு சென்னை மாநகர காவல்துறையினர் பூங்கொடுத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். விரைவில் பணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமிஷ்னர்
அதிமுக ஆட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்படாமல் ஒரங்கட்டப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒருவர் சங்கர் ஜிவால், திமுக ஆட்சி அமைந்த பின்னர் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக ஏ.டி.ஜி.பி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.
இன்ஜினியர்
இவர், 1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இன்ஜினீயரிங் படிப்பைப் முடித்த இவர், ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இன்ஜினீயரிங் படித்தவர். தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி ஆகிய மொழிகளில் பேசுவதில் புலமை பெற்றவர் ஆவார்.
சிறப்பான பணி
மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவான என்.சி.பி, திருச்சி போலீஸ் கமிஷனர், உளவுப்பிரிவில் டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி, சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி ஆகிய முக்கியப்பதவிகளில் சங்கர் ஜிவால் பணியாற்றியவர் ஆவார். அயல்பணியாக மத்திய அரசில் 8 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறார். பிறகு தமிழக அதிரடிப்படை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார். உளவுத்துறையில் நீண்ட அனுபவம் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ், சென்னை மாநகரின் கமிஷ்னராக கடந்தமே மாதம் முதல் பதவி வகித்து வருகிறார்.
பணிக்கு திரும்புகிறார்
டிஜிபி சைலேந்திரபாபு போலவே வெகு இயல்பானவர். காவலர்களுடன் நெருககமாக பழகுபவர். இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தகவல் கேட்டு காவலர்கள் பலர் கவலை அடைந்தனர். தற்போது குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவரை பல காவலர்கள் ஒன்று சேர்ந்து உற்சாகமாக வரவேற்றனர். விரைவில் பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.