சென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய 20,000 பேர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து நடப்பு கூட்டத்திலேயே சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும் என்று கோரி சட்டசபையை இன்று முற்றுகையிட முயன்றனர்.
சென்னையில் நடைபெற்ற பிரமாண்டமான இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போனது. இந்நிலையில் சட்டசபையை முற்றுகையிட முயன்றதாக 20,000 பேர் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.