ஆபாச பேச்சு உட்பட 4 பிரிவுகளில்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ந்த வழக்கு.. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாக பேசியதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் ராஜலட்சுமி என்ற அதிமுக பிரமுகர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சமீபத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் சசிகலா குறித்தும் அவதூறாக உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
சசிகலா விடுதலைக்கு பிறகு... சரணடைந்து விடுவார் முதல்வர்... உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!
இந்திய தண்டனைச் சட்டம்
பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் அநாகரிகமான முறையில் பேசி இருக்கிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.
வீடியோ காட்சி
இந்த புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சியையும் ராஜலட்சுமி அளித்திருந்தார்.
4 பிரிவுகள்
இதை ஆய்வு செய்த பிறகு, ஆபாசமாக பேசுதல், தொழில்நுட்ப தகவல் சட்டம், பெண்களை இழிவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
உதயநிதி பேச்சு
உதயநிதி ஸ்டாலின் பேச்சையடுத்து அதிமுக பிரமுகர்கள் பலரும் அவருக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி எதிர்ப்பை காட்டுவதும், அதை திமுகவினர் தடுப்பதுமாக தகராறு சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. இந்த நிலையில், உதநிதி மீது போலீஸ் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.