சிக்னலில் நின்ற போலீஸ்காரர்.. மின்னல் வேகத்தில் வந்த கார் மோதி பரிதாப பலி.. சென்னையில் சோகம்!
கார் மோதி தலைமை காவலர் பரிதாப பலியானார்
Recommended Video
சென்னை: மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று பலமாக இடித்ததில், சிக்னலில் நின்று கொண்டிருந்த தலைமை காவலர் தூக்கி வீசப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். சென்னை போலீசாரிடையே இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
சென்னை தாம்பரம் அருகே ஜிஎஸ்டி சாலையில் சேலையூர் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது. இதில் தலைமை காவலராக வேலை பார்த்து வருபவர் ரமேஷ். 45 வயதாகிறது. சேலையூரிலேயே இவரது வீடு உள்ளது. அதனால் வழக்கமாக பைக்கில்தான் டியூட்டிக்கு வந்து போவார்.
இந்நிலையில், இன்று காலை நைட் டியூட்டி முடித்துவிட்டு, வீட்டுக்கு செல்ல ஜிஎஸ்டி சாலையில் வந்து கொண்டிருந்தார் ரமேஷ். அப்போது, பைக்கை திருப்புவதற்காக சிக்னலில் சாலையோரம் சிறிது நேரம் காத்து நின்றார். அந்த நேரத்தில், கார் ஒன்று படு வேகமாக வந்து... பைக்கின் பின்புறமாக பலமாக இடித்தது. இதில், கண்ணிமைக்கும் நேரத்தில், ரமேஷ் தூக்கி வீசப்பட்டார்.. படுகாயமடைந்த ரமேஷ், ரத்தவெள்ளத்தில் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பட்ட பகலில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், போலீசுக்கு தகவல் சொல்லியதுடன், காரை ஓட்டி வந்த இளைஞரையும் விரட்டி மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து நடந்த விசாரணையில், காரை வேகமாக ஓட்டி வந்தவர் பெயர் ஆதித்யா என்பதும் வயசு 23 என்பதும் தெரியவந்தது. இவர் ஒரு கல்லூரி மாணவராம். பின்னர், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஆதித்யாவை போலீசார் கைது செய்தனர்.