விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்ய போகிறதா சென்னை போலீஸ்.. பரபர தகவல்
சென்னை: பட்டா கத்தியால் கேக் வெட்டிய விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வது குறித்து சென்னை மாநகர காவல்துறையினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
43 வயதாகும் நடிகர் விஜய்சேதுபதி தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். கேக்கை வெட்டுவதற்காக ஒரு பட்டா கத்தியை பயன்படுத்தியது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது.
பிறந்த நாள் கேக்கை பட்டா கத்தியால் வெட்டிய சம்பவம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடந்ததாகக் கூறி, விஜய் சேதுபதி மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனால் விஜய் சேதுபதி மீது வழக்கு தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
முரளிதரன் படம்...நன்றி வணக்கம்னா.. நன்றி வணக்கம்னு அர்த்தம்.. நக்கலாக பதிலளித்த விஜய்சேதுபதி!
பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ள 'மாஸ்டர்' மிகப்பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி அடைந்துள்ளது. படம் குறித்து விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் திரையரங்கிற்கு மக்கள் அதிக அளவில் சென்று படம் பார்த்து வருவதால் வசூல் அதிகரித்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த நடிகர் விஜய் சேதுபதி அண்மையில் பிறந்த நாள் கொண்டாடினார்.
விஜய் சேதுபதி
இந்த கொண்டாட்டத்தில் திரைப்பட இயக்குனர் பொன்ராம் மற்றும் ஒரு சில உதவி இயக்குநர்களும் பங்கேற்று இருந்தனர். . வீட்டிற்கு நடந்த இந்த விழாவில் பட்டா கத்தியால், விஜய் சேதுபதி கேக் வெட்டும் புகைப்படம் சமூக ஊடகங்களில் கசிந்தது, இது பெரும் விவாதத்தைத் சமூக வலைதளங்ளில் தூண்டியது,
நடவடிக்கை தேவை
ரவுடிகள் பட்டாக்கத்தி கேக் வெட்டிய போது கைது செய்யும் போலீசார் ஒரு முன்னணி நடிகர் இப்படியான செயல்பாடுகளில் ஈடுபடும் போது அதே போன்ற நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இவரை பின்பற்றி ரசிகர்களும் இதே போல் கேக் வெட்ட துவங்கினால் என்ன செய்வது என்ற கேள்வியும்எழுந்தது. பலரும் இது மோசமான முன் உதாரணமாகிவிடும் என்று விமர்சித்தனர்
பெரும் விவாதம்
இதையடுத்து விஜய் சேதுபதி பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் "எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன்.
வருத்தம் தெரிவிக்கிறேன்
தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்." என கூறியுள்ளார்.
நடவடிக்கை எடுக்குமா
2018 ஆம் ஆண்டு முதல்முறையாக ரவுடி பினு என்பவர் தனது பிறந்தநாளை பண்ணை வீட்டில் பட்டா கத்தியால் கேக் வெட்டியதால் கைது செய்தனர். அவருடன் ஏராளமான ரவுடிகள் இருந்ததால அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு போலீசார் பினுவை கைது செய்தனர். இதேபோல் சிறிய சிறிய குற்றச்சம்பபங்களில் ஈடுபட்ட புள்ளிங்கோ குரூப்புகள், வழக்கறிஞர்கள், புதிதாக திருமணம் ஆனவர் என பலர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த அடிப்படையில் விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சில வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.