90 ரூட்டு தலகளுக்கு குறி வைத்த போலீஸ்.. பட்டா கத்திகளை ''அட்டகத்தியாக்க'' திட்டம்.. என்ன பிளான்?
சென்னையில் உள்ள ரூட்டு தல மாணவர்கள் எல்லோருக்கும் போலீசார் அதிரடி குறி வைத்து உள்ளனர்.
Recommended Video
சென்னை: சென்னையில் உள்ள ரூட்டு தல மாணவர்கள் எல்லோருக்கும் போலீசார் அதிரடி குறி வைத்து உள்ளனர். மொத்தமாக 90 மாணவர்களை தீவிரமாக கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை பேருந்துகளில் ரூட்டு தல என்ற விஷயம் மிகவும் பிரபலம். அட்டகத்தி படம் பார்த்தவர்களுக்கு இந்த வார்த்தை கண்டிப்பாக பிரபலமாக இருக்கும்.
சென்னையில் கல்லூரி செல்ல நிறைய ரூட்களில் பேருந்துகள் செல்லும். இந்த பேருந்துகளில் குழு குழுவாக மாணவர்கள் செல்வது வழக்கம். இவர்கள்தான் பெரும்பாலும் அந்த பேருந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். அது மட்டுமில்லாமல் அந்த ரூட்டில் அவர்கள் கல்லூரி வழியாக செல்லும் எல்லா பேருந்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.
சண்டை
இவர்கள்தான் வருடா வருடம் சென்னையில் பஸ் டே கொண்டாடி சர்ச்சையில் சிக்குவார்கள். இது தனி வாழ்க்கை முறையாகவே, கொண்டாட்டமாக அவர்களுக்கு இருக்கும். ஆனால் எவ்வளவு கொண்டாட்டமாக இவர்கள் இருக்கிறார்களோ அதே அளவு பிரச்சனையும் இவர்களுக்கு இடையில் இருக்கும். யார் ரூட்டு தலை என்று அதிகார போட்டி இவர்களுக்கு இடையில் அடிக்கடி வருவதும் வழக்கம்.
சண்டை
இப்படி வந்த பிரச்சனையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் கல்லூரி மாணவர்கள் சென்னையில் பேருந்தில் அடித்துக்கொண்டார்கள். யார் ரூட்டை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்று வந்த பிரச்சனையில் மாணவர்கள் பட்டா கத்தியில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டார்கள். இது வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.
குறி வைத்தது
இவர்களை மொத்தமாக கட்டுப்படுத்த போலீசார் முடிவு எடுத்துள்ளனர். சென்னையில் பல்வேறு கல்லூரி வழியாக செல்லும் பேருந்துகளில் இப்படி மொத்தம் 90 ரூட்டு தலைகள் இருப்பதாக போலீசார் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரின் பெயரும் தற்போது லிஸ்ட் போட்டு எடுக்கப்பட்டுள்ளது. கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஓவிய கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் பெயர்கள் இதில் இடம்பெற்று உள்ளது.
என்ன சொன்னார்கள்
இவர்கள் எல்லோரையும் போலீசார் அழைத்து இன்று எச்சரிக்கை விடுத்தனர். அடுத்த 3 மாதங்களுக்கு இவர்கள் மீது சிறிய புகார் கூட வர கூடாது. அமைதியாக கல்லூரி சென்றுவிட்டு , மாலை கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்ல வேண்டும். ஏதாவது சிறிய புகார் வந்தால் கூட நிரந்தமாக ஜெயிலில் இருக்க வேண்டி வரும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மப்தி போலீஸ்
அதேபோல் இவர்களை கண்காணிக்க இந்த 90 ரூட் பேருந்துகளிலும் மப்தியில் போலீசார்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்யும் மாணவர்களை குறி வைத்து, கல்லூரிக்கு சென்று கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சென்னை கல்லூரி நிர்வாகங்கள் உறுதி அளித்துள்ளது... ஆக மொத்தம் பட்டாக்கத்திகளை.. அட்டைகத்தியாக மாற்றும் நேரம் வந்துவிட்டது