இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்ததாக புகார்- கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது வழக்கு
சென்னை: இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் இணைய தள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
இந்துமத கடவுள்களை ஆபாசமாக யூடியூப்பில் கறுப்பர் கூட்டம் சேனல் சித்தரிக்கிறது; ஆகையால் இந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளால் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
மேலும் சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் சுந்தர வடிவேலன் நாகப்பட்டினம் எஸ்பிக்கு ஆன்லைனில் புகார் அளித்து இருந்தார். அதில், தமிழகத்தில் மத மோதல்களை உருவாக்கும் உள்நோக்கத்துடன் கறுப்பர் கூட்டம் சேனலில் இந்து கடவுள்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
கந்த சஷ்டி பற்றி சர்ச்சைக்குரிய வீடியோ.. கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்க- பாஜக பரபர புகார்
இதனையடுத்து ஜாதி, மத, இன- மொழி ரீதியான மோதலை தூண்டுவதாக கறுப்பர் கூட்டம் இணையதளத்தின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 153(A)(1)(a), 295(p),505(1)(b), 502 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் சேனல் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதனிடையே, "கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் இந்துமத சமஸ்கிருத புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஆபாச கருத்துகளை பொதுமக்களுக்கு புரியும் வண்ணம் 'ஆபாச புராணம்' எனும் தலைப்பில் எடுத்துரைத்து வந்தோம்..இது பெரியார் காலம் தொட்டு பல முற்போக்காளர்கள் மேடைகளில் பேசிய பார்ப்பனிய எதிர்ப்பின் தொடர்ச்சி தான். ஆனால் தமிழ் கடவுள் முருகன் பற்றிய 'கந்தசஷ்டி கவசம்' பற்றிய விளக்க உரைக் காணொளி தமிழக பொதுமக்கள் பலரது மனதை புண்படுத்தி உள்ளது என்பதை நேரடியாக நமக்கு தெரிவித்துள்ளதால்.,அதற்காக கறுப்பர் கூட்டம் வருத்தம் தெரிவித்துகொள்கிறது..அக் காணொளியை யூ டியூப் தளத்தில் இருந்து நீக்கி உள்ளோம். மேலும் கறுப்பர் கூட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓர் இஸ்லாமியர் என்றும் கிறித்துவர் என்றும் பொய்யான பிரச்சாரத்தை இந்துத்துவ அமைப்புகளும்,ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும், பாஜக ஆதரவாளர்களும் பரப்பி வருகின்றனர். மத கலவரத்தை தூண்டும் விதமான இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.