சென்னையில் மனுதர்ம நூலை எரித்த திருமாவளவன் உட்பட 250 பேர் மீது போலீசார் வழக்கு
சென்னை: பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை சென்னையில் எரித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட 250 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அனைத்து பெண்களையும் திருமாவளவன் விபசாரிகள் என பேசிவிட்டதாக ஒரு புகார் எழுந்தது. ஆனால் திருமாவளவனோ, மனுதர்மம்தான் அப்படித்தான் சொல்கிறது; அதையே மேற்கோள்காட்டி பேசினேன் என விளக்கம் தந்தார்.
மனுஸ்மிருதியை தடை செய்.. சென்னையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
மனுதர்ம நூல் தடை கோரிக்கை
ஆனாலும் பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக நடிகை குஷ்பு உள்ளிட்டோர் ஆவேசப்பட்டனர். இதற்காக திருமாவளவன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மனுதர்ம நூலை தடை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்தது.
மனுதர்ம நூல் எரிப்பு
தமிழகத்தின் பல பகுதிகளில் சனிக்கிழமையன்று மனுதர்ம நூலை தடை செய்யக் கோரி போராட்டம் நடைபெற்றது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மனுதர்ம நூல் தீயிட்டு எரிக்கவும் செய்யப்பட்டது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசியல் காரணம்
சென்னை போராட்டத்தில் பேசிய திருமாவளவன், மனுதர்ம நூலின் பகுதிகளை வாசித்து காட்டினார். பெண்களை மனுதர்மம் எப்படி எல்லாம் இழிவுபடுத்துகிறது என்பதையும் சுட்டிக்காட்டிப் பேசினார். அத்துடன் 1 மாதத்துக்கு முன்னர் பேசிய பேச்சை வைத்து இப்போது திமுக கூட்டணியில் சலசலப்பை உருவாக்கவே திரித்து பொய்யை பரப்புகின்றனர் என்றார் திருமாவளவன்.
250 பேர் மீது வழக்கு
மேலும் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாட்டையடியாக இல்லாமல் செருப்படியாக கொடுத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அவர் யாரை கண்டிக்க வேண்டுமோ அவர்களை கண்டித்திருக்கிறார் எனவும் திருமாவளவன் பேசினார். இதனிடையே தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளில் திருமாவளவன் உள்ளிட்ட 250 பேர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.