சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம்- மு.க.ஸ்டாலின் உட்பட 2,000 பேர் மீது வழக்கு
சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2000 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் 23 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு புதிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
டெல்லி விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்றது.
Mr.எடப்பாடி பழனிசாமி இத்தோடு நிறுத்திகங்க... உண்ணாவிரதப் போராட்ட நிறைவுரையில் ஸ்டாலின் ஆவேசம்..!
இந்த போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் உட்பட 2,000 பேர் மீது 4 பிரிவுகளில் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.