கனிமொழி எம்.பி. இல்லத்திற்கு தரப்பட்ட பாதுகாப்பு... காவல்துறை முடிவில் மாற்றம்
சென்னை: திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி இல்லத்திற்கு தரப்பட்ட போலீஸ் பாதுகாப்பு நேற்று முன் தினம் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் பாதுகாப்பு தொடரும் என காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.
கனிமொழியின் சி.ஐ.டி.காலனி இல்லத்திற்கு நாளொன்றுக்கு 5 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கனிமொழி இல்லத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை வாபஸ் பெற்ற ஒரே நாளில் சென்னை மாநகர காவல்துறை தனது முடிவை மாற்றிக்கொண்டது.
ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்... மத்திய அமைச்சரவை முடிவுக்கு திமுக கடும் கண்டனம்
கனிமொழி இல்லம்
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி.யின் இல்லம் சென்னை சி.ஐ.டி.காலனியில் அமைந்துள்ளது. கருணாநிதி இருந்தவரை ஊடகங்களில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட இடமாக சி.ஐ.டி.காலனி இருந்தது. கருணாநிதியை சந்திப்பதற்காக கட்சியினர் வருகை, பார்வையாளர்கள் சந்திப்பு என எப்போதும் பரபரப்பாக இருந்த சி.ஐ.டி. காலனி இல்லம், இப்போது நிசப்தமாக இருக்கிறது. இதனிடையே கனிமொழி எம்.பி.யை சந்திப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் மட்டும் வந்து சென்ற நிலையில் கொரோனாவுக்கு பின் அதற்கும் தடை போட்டுவிட்டார் கனிமொழி.
5 காவலர்கள்
முன்னாள் முதலமைச்சர் வீடு என்பதாலும், திமுகவின் இரண்டாம் கட்டத்தலைவர்களில் முக்கியமானவர் கனிமொழி என்பதாலும் அவரது வீட்டுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு தரப்பட்டு வந்தது. நாளொன்றுக்கு 5 காவலர்கள் இதற்காக சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த பாதுகாப்பை நேற்று முன் தினம் செவ்வாய்கிழமை இரவுடன் திரும்பப் பெற்றுக்கொண்டது காவல்துறை. ஊரடங்கு கண்காணிப்பு பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதால் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது எனக் கூறப்பட்டது.
சென்னை போலீஸ்
இந்நிலையில் கனிமொழி எம்.பி.வீட்டுக்கு பாதுகாப்பு தொடரும் என சென்னை மாநகர காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. பாதுகாப்பை வாபஸ் பெற்ற ஒரே நாளில் தனது முடிவை மாற்றிக்கொண்டது போலீஸ். தனது தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி கிளைச் சிறையில் நடந்த தந்தை மகன் மரணத்திற்கு நீதி கோரி கனிமொழி போர்க்குரல் உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரது வீட்டுக்கு பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டால் அது தேவையற்ற விமர்சனங்களை எழுப்பும் என காவல்துறை நினைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கேட்க வில்லை
இது தொடர்பாக கனிமொழி எம்.பி. தரப்பிடம் நாம் பேசிய போது, ''மேடம் பாதுகாப்பு கொடுக்குமாறு யாரிடமும் கேட்கவில்லை. காவல்துறையினர் தாங்களாக பாதுகாப்பை விலக்கிக்கொண்டார்கள், இப்போது கொடுப்பதாக தெரிவித்துள்ளார்கள். தூத்துக்குடியில் தொகுதி மக்களை சந்திக்க செல்லும் போது கூட, போலீஸ் பாதுகாப்பை விரும்பமாட்டார்கள் மேடம். பாதுகாப்பு என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என நினைப்பார்கள்'' என பதில் கிடைத்தது.