சித்ரா குளிக்க போகும்போது ஹேமந்த் ஏன் வெளியே வந்தார்.. பல சந்தேகங்கள்.. போலீஸ் தீவிர விசாரணை
சென்னை: டிஸ்கவரி சேனல் தவிர அத்தனை சேனல்களிலும் வேலை பார்த்தவர் என்று பாண்டியன் ஸ்டோர் 'புகழ்' நடிகை சித்ரா பற்றி ரசிகர்கள் சிலாகித்து கூறுவார்கள். அந்த அளவுக்கு, இந்த துறையில், ஒவ்வொரு இடத்திலும் முட்டி மோதி முன்னுக்கு வந்தவர் சித்ரா.
ஆம்.. சென்னை, நசரத் பேட்டையிலுள்ள ஹோட்டலில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளாரே அதே சித்ராதான்.
2013ம் ஆண்டு இவரது வெகுஜன தொலைக்காட்சி அறிமுகம் ஏற்பட்டது. மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானார். அன்று முதல், தற்கொலை செய்து கொள்ளும்வரை அவர் மக்களிடம் புகழடைந்துதான் இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை சித்ரா தற்கொலை.. ஹோட்டல் அறையில் தூக்கு
பல டிவி சேனல்கள்
மக்கள் தொலைக்காட்சியைத் தொடர்ந்து, ஜெயா டிவி, ஜீ தமிழ், உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியலில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி தனது சொந்த முயற்சிகளால், தனது உயரத்தை அதிகரித்துக் கொண்டே சென்றவர் சித்ரா.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்த பிறகு, இவர் புகழின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். தனி ரசிகர் கூட்டம் உருவானது. இன்ஸ்டாகிராமிலும் அவருக்கு பாலோவர்கள் அதிகம். தனது புகழின் உச்சத்தில் இருந்த நிலையில்தான் ஆகஸ்ட் மாதம் தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயமானது.
நட்சத்திர ஹோட்டல்
சித்ரா வீடு திருவான்மியூர் பகுதியில் அமைந்துள்ளது. அங்கிருந்து புறநகர்ப் பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பது சிரமம் என்பதால், நசரத்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கி உள்ளார். ஆனால், அவரோடு திருமணம் நிச்சயமாகி இருந்த ஹேமந்த் அங்கு தங்கியிருந்ததுதான் இப்போது சந்தேகக் கேள்விகளை எழுப்பியுள்ளது. திருமணத்துக்கு முன்பே எதற்காக சித்ரா உடன் ஹேமந்த், தங்கி இருந்தார் என்ற கேள்வி காவல்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.
வருங்கால கணவரும் உடனிருந்தார்
சித்ரா தற்கொலை செய்து கொண்டபோது ஹோட்டல் அறையில்தான் ஹேமந்த் தங்கியிருந்துள்ளார். அவர்தான் ஹோட்டல் நிர்வாகத்துக்கு சித்ரா தனது அறைக்குள் பூட்டி கொண்டு திறக்க மறுப்பதாக தகவல் கொடுத்துள்ளார். பிறகு ஹோட்டல் நிர்வாகம், மாற்று சாவி கொண்டு அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்றபோது அங்கு சித்ரா புடவையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
குளிக்கப் போவதாக கூறினார்
இதனிடையே காவல்துறை, ஹேமந்த்திடம், நடத்திய விசாரணையின்போது அவர் அளித்த வாக்குமூலம் இதுதான்: சித்ரா அதிகாலை, 2.30 மணிக்கு ஹோட்டல் அறைக்கு வந்ததாகவும், குளிக்க போவதால் நீங்கள் வெளியே இருங்கள் என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்கு உள்ளே சென்றதாகவும், எனவேதான் தான் வெளியே வந்ததாகவும் ஆனால் அறைக் கதவை பூட்டிக்கொண்டு சித்ரா திறக்க மறுத்ததால், ஹோட்டல் நிர்வாகத்தின் மூலம் கதவை திறந்து உள்ளே சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏன் இப்படி நடந்தது?
குளியலறைக்கு கதவு இருக்கிறது. அப்படி இருக்கும்போது குளிக்கச் சென்ற சித்ரா ஹேமந்த்தை எதற்காக வெளியே செல்லுமாறு சொல்ல வேண்டும் என்ற கேள்வி விசாரணை அதிகாரிகளிடம் எழுந்துள்ளது. "அந்த அளவுக்கு, கூச்ச சுபாவமும், விலகி இருக்க வேண்டும் என்ற விருப்பமும் இருப்பவர்கள், திருமணத்துக்கு முன்பு எதற்காக ஒரே ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார்கள்? இது நெருடலாக இருக்கிறதே.." என்கிறார் விசாரணை அதிகாரி ஒருவர்.
ஹேமந்த்திடம் தீவிர விசாரணை
ஹேமந்த் அளித்த வாக்குமூலத்தில் இவ்வாறு, முரண்பாடுகள் இருப்பதால் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்டதும் சக நடிகர்-நடிகைகள் சித்ரா உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை மையத்திற்கு வருகை தந்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பல சந்தேகங்கள்
வருங்கால கணவருடன் எதற்காக சூட்டிங் செல்லும்போது கூட ஒரே அறையில் சித்ரா தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது? எதற்காக அவர் அறையை விட்டு வெளியே வந்து நின்றார்? வேறு ஏதேனும் குடும்ப பிரச்சினை தற்கொலை பின்னணியில் இருக்கிறதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்