லண்டன் மாதிரி ஆகுது சிங்கார சென்னை.. எங்கே போனாலும் பின் தொடருமாம் 3வது கண்!
Recommended Video
சென்னை: சென்னை சிட்டியின் போலீஸ் கமிஷனராக இருப்பவர் ஏ.கே.விஸ்வநாதன். இந்தப் பதவிக்கு அவர் வந்தமர்ந்து கணிசமான மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் ஸ்திரமாக அதில் அமர்ந்திருக்கிறார். ஏ.கே.விஸ்வநாதனின் திறமை மட்டுமல்ல எளிமையும் இதற்கு ஒரு காரணம் என்பார்கள் சக காவல்துறை அதிகாரிகள்.
1990-ம் ஆண்டு பேட்ச் காவல்துறை அதிகாரியான அவர் நக்சல் தடுப்பு, கள்ளச்சாராய வேட்டை, கோயமுத்தூர் குண்டு வெடிப்பு வழக்கு, உளவுத்துறை பணி என தில்லான ப்ராஜெக்ட்களில் கில்லியாக செயல்பட்ட அனுபவம் மிக்கவர் என்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி ஆளும் தரப்பிற்கும் அவரது பர்ஃபார்மென்ஸ் பிடித்திருப்பதால் சிறப்பாய் தொடர்கிறது கமிஷனர் விஸ்வநாதனின் பணி சமீபத்தில் கூட 'சிறந்த ஆளுமை' க்கான விருதையும் முதல்வரிடம் பெற்றுள்ளார்.
முதல்வர் ஏன் ஃபாரீன் போயிருக்காருனு இன்னும் 2 நாள்ல சொல்றேன்.. தங்கதமிழ்ச் செல்வன் பகீர் பேச்சு
சென்னை மூன்றாவது கண்
இந்த நிலையில் சென்னை முழுக்க ‘மூன்றாவது கண்' எனும் பெயரில் ரெண்டரை லட்சம் சி.சி.டி.வி. கேமராக்களை வைத்து போலீஸ் கண்காணித்துக் கொண்டிருப்பதை இந்த நேரத்தில் குறிப்பிட வேண்டும். இந்த வசதியின் மூலம் குற்றம் செய்துவிட்டு எஸ்கேப் ஆகும் நபர்களை விரைந்து பிடிப்பது சுலபமாகி இருக்கிறது. அதன் பிறகு அவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுவதும், அவர்களின் கை கால்களில் தமிழக காவல்துறை சார்பாக சிறப்பு மாவுக்கட்டு போடப்படுவதும் தனிக்கதை.
கண்காணிக்கிறது கேமரா
எப்போதுமே கேமரா கண்காணிக்கிறது என்பதால் சென்னை சிட்டியில் குற்றச்செயல்கள் கணிசமாக குறைந்துள்ளது! என்று பெருமையாக குறிப்பிட்டுக் கொள்கின்றனர் இந்த சிட்டியின் போலீஸ் அதிகாரிகள். 'சம்பவத்தை பண்ணினால், கேமராவில் சிக்குவோம்' என்று கிரிமினல்கள் பயப்படுகிறார்களாம். இது மிகைப்படுத்தப்படாத உண்மையும் கூட.
கமிஷனர் பெருமை
இப்படி மூன்றாவது கண் சென்னையை கண்காணித்துக் கொண்டே இருப்பது பற்றி பெருமையாக பேசும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் "லண்டனில் ஒரு நபர் வீட்டை விட்டு வெளியே வந்து மீண்டும் வீட்டுக்குள் செல்வது வரை எல்லா காட்சிகளும் ரெக்கார்டு செய்யப்பட்டுவிடும். தற்போது அது போலத்தான் சென்னையும் உருமாறிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வீதிகள் என எங்கும் இந்த மூன்றாவது கண் திறக்கப்படும். இது தவிர சென்னையின் அனைத்து நுழைவாயில்களிலும் இப்படி மூன்றாவது கண்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
ஒளிவு மறைவே இல்லாமல்
கிரிமினல் நடவடிக்கைகளை அறவே ஒழிப்பது, சாலை விபத்துக்களை தவிர்ப்பது, விபத்து நடந்த சில நொடிகளிலேயே சென்று உயிர்காப்பது, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு என எல்லா விதத்திலும் சென்னை மேம்பட்டு விளங்கப்போகும் காலம் மிக விரைவில்." என்றிருக்கிறார் பெருமையாக. அப்படின்னா சென்னையில் அம்மாம் பெரிய நடிகர் ரஜினி முதல் கிராமத்துல இருந்து படிப்புக்கு வர்றவங்க வரைக்கும் எல்லாருடைய நடவடிக்கைகளும் எங்கே போறாங்க, எப்ப வர்றாங்கன்னு ஒளிவு மறைவே இல்லாமல் பதிவாகும்னு சொல்லுங்க.
கேமரா கண்காணிப்பில் மட்டுமில்லாமல் சுத்தத்திலேயும் நம்ம சென்னையை லண்டன் மாதிரியே ஆக்கிடுங்க சார். புண்ணியமாகப் போகும்!
- ஜி.தாமிரா