சென்னை மக்களே.. மளிகை கடைக்கு நடந்து போங்க.. பைக்கில் போனால் பறிமுதல்தான்.. போலீஸ் கமிஷனர் வார்னிங்
சென்னை: சென்னையில் பொது மக்கள் காய்கறி உள்ளிட்டவை வாங்க கடைகளுக்கு நடந்து செல்ல வேண்டும், பைக் அல்லது வேறு வாகனங்களில் மளிகை கடைக்கு சென்றால், பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.
Recommended Video
சென்னை மாநகராட்சி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்கள் அனைவரும் நடந்தே சென்று மளிகை பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
ஒரு கிலோ மீட்டர் அல்லது இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில்தான் மளிகை கடைகள் இருக்கும்போது அதைப் பயன்படுத்தலாம்.
பல கி.மீ
ஒருவாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதைவிடுத்து, இருசக்கர வாகனங்களில் காய்கறி வாங்க போவதாகவும், மளிகை பொருட்கள் வாங்கப் போவதாக கூறிக் கொண்டு, பல கிலோமீட்டர்கள் தள்ளி கூட செல்வதாக புகார் வந்துள்ளது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
வாகனங்கள் பறிமுதல்
இதுவரை 30,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 12 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் நடந்தே சென்று பொருட்களை வாங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். அதை மீறி வாகனங்களை பயன்படுத்தினால் வாகனங்களை பறிமுதல் செய்து ஊரடங்கு முடியும் வரை காவல் துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம்.
போலீஸ் பாதுகாப்பு
சென்னை காவல்துறை மட்டுமல்ல, அனைத்து காவல் துறையினரும் கடுமையாக பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள். போலீசாருக்கு உடல்நிலை பாதிப்பு ஏதாவது இருந்தால் கண்டிப்பாக பரிசோதனை செய்வோம். காவல்துறையினருக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளோம். சானிடைசர் வழங்கியுள்ளோம்.
பொருட்கள்
குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உணவு பொருட்கள் தக்க நேரத்தில் சென்று சேர வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள் பலரும் இந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சீல் வைத்திருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் வெளியே சென்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாக புகார்கள் வருகின்றன. அவர்களுக்கு அடிப்படை பொருட்கள் அனைத்தும் உரிய நேரத்தில் கொண்டு சேர நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் ஒத்துழைப்பு
இந்த வைரஸ் பாதிப்பின் அளவை மக்கள் புரிந்து கொண்டு தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள மக்கள் தானாக முன்வரவேண்டும். எத்தனைதான் நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார். பெங்களூரில் சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள காவல்துறையினர், இதுபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளனர். நடந்து சென்றுதான் மளிகை சாமான்கள் வாங்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.