டபுள் மீனிங் டயலாக்.. முக்கல் முனகல் பாட்டுகள்.. டிக்டாக்கில் விளையாடும் எஸ்ஐ.. அதுவும் டூட்டியிலேயே
சென்னை போலீஸ்காரரின் டபுள் மீனிங் வீடியோ சர்ச்சையை கிளப்பி உள்ளது
சென்னை: வெறும் ஆபாசம், டபுள் மீனிங் டயலாக், முக்கல், முனகல் பாட்டுக்கள் என்று டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பொதுமக்களின் எரிச்சலையும், ஆத்திரத்தையும் கிளப்பி வருகிறார் உதவி ஆய்வாளர் கல்யாண சுந்தரம்!
டிக்-டாக் இணையத்தை ஆட்டிப்படைத்து வந்து கொண்டிருக்கிறது.. பெண்கள் உட்பட எல்லா இளைஞர்களும் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.
கலைதாகம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள் என்பதால் இதனுடைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது... ஆனால் இது எல்லை மீறும்போதுதான் விபரீதங்களும், விளைவுகளும் படுமோசமாக ஏற்படுகின்றன.
இந்த டிக்டாக் வேண்டாம் என்று கோர்ட் எச்சரித்தும், வாதாடி இந்த ஆப்பை திரும்பவும் நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர்.. ஆனால் பயன்பாடுகள் என்று சொல்வதைவிட, கொடுமைகளே அதிகம் நடக்கிறது. அப்படி ஒரு கூத்துதான் சென்னையில் இப்போதும் நடந்துள்ளது. அதையும் ஒரு போலீஸ்காரரே இதை செய்துள்ளது கடுமையான அதிர்ச்சியை தந்து வருகிறது.
சென்னை தலைமை செயலக காலனி போலீஸ் ஸ்டேஷனில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் கல்யாணசுந்தரம்... இவர் டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.. ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டு, கால் மேல் கால் போட்டு, டபுள் மீனிங் பேசியபடியே இருக்கிறார்.
கடந்த 2019-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்தே இப்படி வீடியோ போட்டு வருகிறார்... இதில் டூயட்டும் உண்டு... பெண்களுடன் பாடுவது, ஆடுவதுபோல் என ஆயிரக்கணக்கான வீடியோக்களை அப்லோட் செய்திருக்கிறார்.. எல்லாமே கசமுசா பாடல்கள்தான்.. முக்கல் முனகல் பாடல்கள்தான்.
நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்சனை போய் கொண்டிருக்கிறது.. எத்தனை போலீசார் கொரோனா தடுப்பு பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார்கள்.. எத்தனை போலீசார் பேர் தொற்று பாதித்து ஆஸ்பத்திரியில் உள்ளனர்.. கேரளாவில் ஒரு போலீஸ்காரர் அம்மா இறந்துவிட்டு, அந்த சாவுக்குகூட அவர் போகாமல் டியூட்டி பார்த்திருக்கிறார்..
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பதவி... திருமாவளவன் போட்ட கண்டிஷன்கள்
இப்படியெல்லாம் காவல்துறை தங்களை அர்ப்பணித்து வரும்போது, கல்யாண சுந்தரத்துக்கு இத்தனை வீடியோக்களை பதிவிட எப்படி மனசு வந்தது? இந்த கொரோனா பரபரப்பிலும், ஒரு நாளைக்கு 20க்கும் மேற்பட்ட பாட்டை அப்லோட் செய்கிறார் என்றால், இவரை என்ன சொல்வது? இதையெல்லாம் அவர் வீட்டில் எடுத்த வீடியோ என்றாலும் பரவாயில்லை.. டியூட்டியில் ஸ்டேஷனில் வைத்தம், ஜீப் முன்னாடி நின்று கொண்டும் நிறைய டிக்டாக் செய்துள்ளார்.. இதை பார்த்தால், மற்ற போலீசாருக்கு அர்ப்பணிப்பில் ஈடுபட எப்படி மனசு வரும்?
டிக்டாக் அவசியம்தான்.. மனஉளைச்சல், பணி நேர அழுத்தம் காரணமாக சிக்கி தவிக்கும் போலீசாருக்கும் இப்படி ஒரு வடிகால் தேவைப்படுவதும் உண்மைதான், மறுப்பதற்கில்லை.. ஆனால், ஒரு நேரம் காலம் வேணாமா? 53 வயசில், டபுள் மீனிங் டயலாக்கை ஒரு போலீஸ்காரர் பேசி டிக்டாக் செய்தால், இளைய தலைமுறை என்ன நினைப்பார்கள்? தயவுசெய்து, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் இதுபோன்ற ஒருசில நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.