துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்.. 8 வழிச்சாலை போல ஆர்வம் காட்டுவாரா முதல்வர்.?
சென்னை: தலைநகர் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு உதவியாக இருக்கும் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் விரைவுச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் மீண்டும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு தேவையான இடத்தை ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள அதிகார போட்டியே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
நாட்டில் முன்னணி துறைமுகங்களில் ஒன்றாக திகழ்கிறது சென்னை துறைமுகம். இதற்குள் தற்போதுள்ள சாலை மார்க்கமாக சரக்கு லாரிகள் சென்ற வர சமயத்தில் இரண்டு நாட்கள் கூட ஆகிவிடுகிறது.
லாரிகள் எளிதாக சென்று வருவதற்காக மதுரவாயலையும் துறைமுகத்தையும் இணைக்கும் வகையில், 19 கிமீ தொலைவிற்கு உயர்த்தப்பட்ட பறக்கும் விரைவு சாலை அமைக்க கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னை துறைமுகத்தின் 10-ம் எண் நுழைவு வாயிலில் துவங்கி, கோயம்பேடு வரை கூவத்தின் கரையோரமும், தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் மதுரவாயல் வரை உயர்த்தப்பட்ட தூண்களின் மேல் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பதே திட்டம்.
ஆனால் இத்தட்டத்தில் ஏற்பட்ட சுணக்கம் பல்லாண்டுகளாக நீடிக்கிறது. இதுபற்றி பேசிய லாரி உரிமையாளர் சங்கத்தினர், முதல்வர் பழனிசாமி சேலம் 8 வழிச்சாலையில் காட்ட கூடிய ஆர்வத்தை ஏன் இதற்கு காட்ட மறுக்கிறார் என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிரம்மபுத்திரா நதியில் வரலாறு காணாத வெள்ளம்.. செய்வதறியாமல் 15 லட்சம் பேர் அஸ்ஸாமில் தவிப்பு
20 நிமிடங்களில் மதுரவாயிலில் இருந்து துறைமுகத்திற்கு போக கூடிய வகையிலான திட்டத்தை, இவ்வளவு ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதில் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ளனர். இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய போது அன்றைய மதிப்பீடு ரூ.1,815 கோடி ஆகும்.
அதனை டெண்டர் எடுத்த நிறுவனம் ராட்சத தூண்களை நிறுவியுள்ள நிலையில், தற்போது திட்டப்பணிகள் பாதியிலயே நிறுத்தப்பட்டுள்ளன. கூவம் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படும், மழை காலத்தில் வெள்ள அபாயம் ஏற்படும் என கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதும் இதற்கு காரணம். தற்போது இத்திட்டம் மறுசீரமைப்பு பெற்றுள்ளது.
4 வழிக்கு பதிலாக 6 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடும் ரூ.3,000 கோடியாக அதிகரித்துள்ளது இத்திட்டம் பற்றி மேலும் தகவல் தெரிவித்த கட்டுமானத்துறை வல்லுநர்கள், நேப்பியர் பூங்கா அருகேயுள்ள நிலத்தை கடற்படையும், துறைமுகமும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே கடற்படை இத்திட்டத்திற்காக நிலத்தை விட்டு கொடுத்தால், தானாகவே துறைமும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் நிறைவேறி விடும் என்றனர். சென்னை துறைமுகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்தே, பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் துறைமுகம் தற்போது நஷ்டத்தில் இயங்குவதை காரணம் காட்டி, இத்திட்டத்தை கைவிடும் சூழல் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.
மக்களின் எதிர்ப்பை மீறி சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என காண்பித்து வரும் உறுதியை, முதல்வர் பழனிசாமி இதிலும் காட்ட வேண்டும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.