தலைசுற்றி விழுந்து மரணித்த ரூத்பிரின்சி! திடுக்கிட்டுப் போன பெற்றோர்! போதை மாத்திரையால் மரணமா?
சென்னை : சென்னையில் ராணிமேரி கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டதால் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் விற்பவர்கள் மீதான கடும் நடவடிக்கையை தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. 'கஞ்சா ஆபரேசன் 2.O' என்ற பெயரில் அதிரடி வேட்டையை நடத்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் கஞ்சா ஆபரேசன் 2..O வை தீவிரப்படுத்தி சோதனையையும், கண்காணிப்பையும் காவல்துறையினர் நடத்தி வருவதோடு, நூற்றுக்காணக்கானோரை கைது செய்து வருகின்றனர்.
அதிர்ச்சி சம்பவம்
ஆனாலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போதைப் பொருள் விற்பனை மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர் என்றே கூறவேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் போதை மருந்து பார்ட்டியின் போது அளவுக்கு அதிகமாக போதை பொருட்களை எடுத்துக் கொண்ட பிரவீன் என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கல்லூரி மாணவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் தற்போது வரை போதைப்பொருள் புழக்கம் இருப்பதாகவே தெரிகிறது.
போதை மாத்திரை விற்பனை
காரணம் கல்லூரி மாணவி ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டதால் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகர் மேற்கு சாலையில் உள்ள உதயம் காலனி வசித்துவருபவர் சாம்யுவராஜ். இவரது மகள் ரூத்பிரின்சி குயின் மேரிஸ் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரியில் இருந்த அவருக்கு கடந்த மாதம் 8ஆம் தேதி திடீர் என்று மயக்கம் ஏற்பட்டுள்ளது. மயக்கம்தானே என்று நினைத்து சாதாரணமாக விட்டு விட்டனர். பிறகு மீண்டும் சோர்வு ஏற்பட்டு மயக்கம் வந்துள்ளது.
திடீர் மரணம்
அதன்பிறகு 9 தேதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுமேலும் ரூத்பிரின்சியின் உடல்நிலை மோசமடைந்ததால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மீண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்து உள்நோயாளியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 22.5.2022 அன்று சுமார் இரவு 9 மணியளவில் ரூத்பிரின்சி இறந்துவிட்டார்.
உடற்கூறு ஆய்வு முடிவுகள்
சிகிச்சைக்கு முன்பு ரூத்பிரின்சி தான் படித்த கல்லூரியில் தன்னுடன் பயின்று வரும் மாணவி ஒருவர் மூலம் தனக்கு போதை மாத்திரை கிடைத்ததாக தெரிவித்து இருக்கிறார். அதனை சாப்பிட்ட பிறகு மயக்கம், சோர்வு, தலைசுற்றல் இருந்ததாகக் கூறியுள்ளார். ரூத்பிரின்சி உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மரணத்திற்கான காரணம் பற்றிய ரூத்பிரின்சியின் உள்ளுறுப்புகளின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் நிலுவையில் உள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் புகார்
ரூத்பிரின்சி இறப்பு குறித்து அவரது பெற்றோர் சாம்யுவராஜ் முதல்வர் தனி பிரிவு, காவல் நிலையம் என அனைத்து இடங்களிலும் புகார் செய்துள்ளார். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது, என் கவனத்திற்கு வந்த உடனே துறை ரீதியாக அறிக்கை கேட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கல்லூரியில் போதை மாத்திரையை யாரும் பயன்படுத்தவில்லை. அதனை தான் உறுதி செய்துவிட்டதாக தெரிவித்தார். ஒரு மாணவி கல்லுரி வளாகத்தில் இருக்கும் போதுதான் நாங்கள் பொறுப்பு ஏற்க முடியும் என்றும் தெரிவித்தார்.