சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. கேளம்பாக்கத்தில் காட்டாறு போல ஓடிய மழைநீர்.. வைரல்!
சென்னை: தலைநகர் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கேளம்பாக்கம் உள்ளிட்ட சில பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால் இங்குள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் விரைவாக நிரம்பி வருகின்றன. அதேபோல கனமழையால் பல பகுதிகளிலும் கடுமையான வெள்ள பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
|
தலைநகர் சென்னை
குறிப்பாக இந்த மாத தொடக்கம் முதலே தலைநகர் சென்னையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. நவம்பர் முதல் வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை முழுக்க கனமழையைக் கொடுத்தது. அப்போது பெய்த கனமழையால் சென்னையில் பல பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்ததது. பல சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியதால் சில நாட்கள் மூடப்பட்டன. இதில் இருந்து முழுமையாக மீண்டு வரவே சென்னைக்கு சில நாட்கள் வரை ஆனது.
|
மீண்டும் மழை
அதன் பின்னரும் கூட கடந்த வாரம் சில நாட்கள் நல்ல மழை பெய்தது. கனமழையால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டதால் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் ராஜிவ் சர்மா தலைமையில், ஆறு பேர் கொண்ட குழு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். தலைநகர் சென்னையில் சில நாட்கள் விட்டிருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.
கேளம்பாக்கம்
இதனால் நகரில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை நகர்ப் பகுதிகளில் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில பகுதிகளில் இடுப்பளவுக்குக் கூட வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. சென்னை கேளம்பாக்கம் பகுதியில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து வெள்ளநீர் பெருக்கெடுத்துப் பாயும் வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இதேநிலை தான்
அங்கு மட்டுமின்றி கேளம்பாக்கம் பகுதியைச் சுற்றியுள்ள வேறு சில பகுதிகளிலும் கூட இதே நிலை தான் எனப் பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒருபுறம் வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கூட, மறுபுறம் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ள நீரை முழுமையாக வெளியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் சென்னைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
Recommended Video
1000 மி.மீ மழை
தலைநகர் சென்னையில் இந்த மாதம் மட்டும் 1000 மி.மீ மழை பதிவானதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 200 ஆண்டுகளில் தலைநகர் சென்னையில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இது 4ஆவது முறையாகும். இதற்கு முன் 1918 நவம்பர் (1088 மிமீ), 2005 அக்டோபர் (1078 மிமீ), 2015 நவம்பர் (1049 மிமீ), ஆகிய ஆண்டுகளில்ல மட்டுமே 1000 மி.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.