சென்னையில் தொடர் மழையால் டிராபிக் ஜாம்... எந்தெந்த ரூட்டை தவிர்க்கலாம்!
Recommended Video
சென்னை : சென்னையில் பருவமழை தொடக்கமே படுஜோராக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை பெய்யத் தொடங்கியதுமே சென்னை நகரின் சாலைகளில் டிராபிக் ஜாமும் ஜாம் ஜாம் என்று இருக்கிறது. கூகுள் மேப்பில் பார்த்தால் சென்னையின் பிரதான சாலைகள் அனைத்துமே ரெட் கோடு தான் காட்டுகிறது. அதாவது பிரதான சாலைகள் அனைத்திலுமே வாகனங்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன.
தீபாவளி ஷாப்பிங் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு வீடு திரும்புபவர்களுக்கு சென்னையின் மழை சிரமத்தை தந்துள்ளது. காலையில் வழக்கம் போல தொடங்கிய இன்றைய நாள் முடிவதென்னவோ நல்ல மழையாக இருக்கிறது. பிற்பகல் தொடங்கிய கும்மிருட்டு கொஞ்சம் கொஞ்சமாக பரவி இடி, மழை என்று சென்னை நகர் முழுவதிலும் தனது தடத்தை பதித்துள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளான கிண்டி, வடபழனி, அண்ணாசாலை, திநகர், கோடம்பாக்கம், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், எண்ணூர், காசிமேடு, போரூர், பூந்தமல்லி, தாம்பரம், குரோம்பேட்டை, தரமணி என நகர் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி, கோயம்பேடு, வேளச்சேரி, தரமணி சாலைகளில் வாகன நெரிசல் அதிக அளவில் இருக்கிறது. சூளைமேடு, அண்ணாநகர், முகப்பேர் சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. நுங்கம்பாக்கம் செல்லும் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் இருந்து தப்பிக்க தாறுமாறாக செல்வதால் சாலையோரம் செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் மழையில் இருந்து தப்பிக்க பலர் கேப்களை புக் செய்து செல்வதாலும் வழக்கத்தை விட போக்குவரத்து அதிக அளவில் இருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.