ஒரே ஒரு டிவீட்.. ஓயாமல் உழைத்த தொண்டர்கள்... 480 யூனிட் ரத்தம் சேகரித்து அசத்திய நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சிக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பாராட்டு தெரிவித்துள்ளது
சென்னை: சீமானுக்கு சென்னை அரசு மருத்துவமனை ஒரு சபாஷ் போட்டுள்ளது. அத்துடன், 480 யூனிட் ரத்தத்தை நன்கொடையாக வழங்கியதற்காக ஒரு சர்ட்டிபிகேட்டையும் தந்து மகிழ்வித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில், பிரபாகரன் பிறந்த நாளுக்கு வருடா வருடம் தொண்டர்கள் ரத்த தானம் செய்வது வழக்கம். அவ்வாறு தானமாக அளிக்கும் ரத்தங்களை சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களுக்கு அளிப்பார்கள்.
இப்படி ரத்த தானத்திற்காகவே நாம் தமிழர் கட்சி "குருதி கொடை பாசறை" என்ற ஒன்றை இயக்கி வருகிறது. இப்படி ஒரு பாசறை மற்ற கட்சிகளில் இருக்கிறதா, இல்லையா, அவை செயல்பாட்டில்தான் உள்ளனவா என்று தெரியாது. ஆனால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இதை தீவிரமாக கையில் எடுத்து செய்து வருகிறார்கள்.
பல நாடுகளை வென்ற பேரரசன் சொந்த மக்களின் நிலத்தை பறிப்பாரா? இயக்குநர் பா.ரஞ்சித்தை விளாசிய சீமான்!
நோயாளிகளுக்கு சிக்கல்
சில தினங்களுக்கு முன்பு, சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் எப்போதுமே கைவசம் இருக்கும் ரத்தம் தீர்ந்து போய்விட்டதாகவும், இதனால் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் இந்த கட்சிக்கு தெரிய வந்துள்ளது.
சீமான் வேண்டுகோள்
ஸ்டாக்கில் ரத்தம் இல்லை என்றதும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் "நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம்" என்று குருதிக்கொடைப் பாசறை வாயிலாக நாம் தமிழர் உறவுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சீமானுக்கு பாராட்டு
அதன்படி 500-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ரத்த தானம் அளித்திருந்தனர். இவ்வாறு குருதிக்கொடை பாசறை மூலமாக சேகரிக்கப்பட்ட 346 யூனிட் ரத்தத்தை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அளித்தனர். இதற்காக தான் ஆஸ்பத்திரி சீமானை மனமார பாராட்டி உள்ளது.
பாராட்டு
இதற்கான சான்றிதழை குருதிக்கொடைப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் முபசெ நாதனிடம் மருத்துவமனை நிர்வாகம் வழங்கி உள்ளது. பாராட்டை பெற்ற நாதனுக்கு சீமானும் வாழ்த்து சொல்லி உள்ளார். கேட்ட நேரத்தில் என்றில்லாமல், யாருக்கு, எப்போதெல்லாம் ரத்தம் தேவைப்படுகிறதோ, அதற்கு எந்நேரமும் தயாராக உள்ளனர் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்!