சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை டாக்டர்கள் திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு.. உடனே வாபஸ்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் இன்று மதியம் 3 மணி முதல், பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
ஆனால் மருத்துவமனை டீன் அழைத்து பேசியதன் பிறகு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் நோயாளிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்தான் பெரும்பாலான கொரோனா வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை, தங்குவதற்கான வசதிகள் சரியில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு மேல் பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக மருத்துவர்கள் அறிவித்ததாகவும் தகவல் வெளியான நிலையில் சென்னையில் இன்று ராஜீவ்காந்தி மருத்துவர்கள் சிலர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, எங்களுக்கு சில பிரச்சினைகள் இருந்தது உண்மைதான். மருத்துவமனை டீன், உள்ளிட்ட நிர்வாக குழுவினர் அழைத்து பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பணி நிறுத்தம் எதுவும் செய்யவில்லை. வழக்கம்போல பணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, கொரோனாவால் பலியான மருத்துவர்கள் உடல்களை அடக்கம் செய்யும்போது சில பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலாட்டா செய்தனர். இதனால் மருத்துவர்கள் மனரீதியாக உளைச்சலில் இருந்த நிலையில், மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அல்லது மருத்துவர்களுக்கும் அவர்கள் மூலமாக மேலும் பலருக்கும் இந்தப் பிரச்சினை பரவ வாய்ப்பு இருக்கிறது என்று சுகாதாரத் துறை வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவர்கள் பணி நிறுத்தம் என்ற தகவலும், பிறகு அப்படி இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.