வாலை வைத்து மட்டுமே நாய் கறி என்று சொல்ல முடியாது.. சென்னைக்கு வந்த இறைச்சியில் தொடரும் மர்மம்
Recommended Video
சென்னை: சென்னைக்கு வந்திறங்கியது, ஆடா அல்லது, நாய் கறியா என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஜோத்பூரிலிருந்து வந்த சுமார் 2000 கிலோ இறைச்சி கடந்த சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. உணவுத்துறை அதிகாரிகள் சோதித்து பார்த்துவிட்டு இது நாய்க்கறி போல இருப்பதாக கூறி, அவற்றை அழிக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று, அந்த கழிவுகள் அழிக்கப்பட்டன.
ஆனால், திடுக்கிடும் திருப்பமாக, அது நாய்க்கறி கிடையாது. ஆட்டு கறி என்று, ஓட்டல் உரிமையாளர் ஷகிலா பானு என்பவர் பேட்டியளித்துள்ளார்.
நாய்க்கறி
ஷகிலா பானு இதுதொடர்பாக நிருபர்களிடம் பேசும்போது, ரயிலில் வந்து இறங்கிய 800 கிலோ இறைச்சி எங்களுடையதுதான். இதை நாய்க்கறி என்று யார் உங்களிடம் சொன்னது. யாரோ ஒரு சிலரின் வேலைதான் இது போல நாங்கள் முன்பதிவு செய்திருந்த இறைச்சியை நாய்க்கறி என்று குப்பையில் கொட்ட செய்துள்ளது. எங்களுக்கு நாங்கள் ஆர்டர் செய்த இறைச்சி வந்தாக வேண்டும்.
குற்றச்சாட்டு
என்ன கறி என்பது தெரியாமல் பினாயிலை ஊத்தி அதை நாசம் செய்து உள்ளார்கள். பினாயில் படாத எஞ்சிய பகுதிகளை சோதனையிட்டு பார்த்தால், அது நாய்க்கறி அல்ல ஆட்டுக்கறி என்பது தெரியும். நாய்க்கறிதான் என்று உறுதி செய்தால், எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.
ராஜஸ்தானில் ஆடு
மேலும் அவர் அருகே இருந்த சிலர் தங்களது செல்போனில் இருந்து ஒரு புகைப்படத்தை காட்டினர். இதுதான் ராஜஸ்தானில் ஆடு என்றும், இதன் வால் பகுதி நாயைப் போலவே நீளமாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். இது உண்மைதானா என்று ஆய்வு செய்து பார்த்தபோது, நாட்டின் சில பகுதிகளில் சில ஆட்டினங்களின் வால், நாய் வால்போல மிகவும் நீண்டு காணப்படும் என்றும், உலகின் பல பகுதிகளில் இதுபோல சில அரிய வகை ஆட்டு இனங்கள் இருப்பதும் தெரியவருகிறது.
புகைப்படங்கள்
நீங்கள் புகைப்படங்களில் பார்ப்பது கூட அது போன்ற ஆட்டு இன வகைகள்தான். இவை இந்தியாவிலும் சில பகுதிகளில் இருக்கின்றன. எனவே அவசரப்பட்டு ஆட்டுக்கறியை நாய்க்கறி என்று நினைத்து அழித்துவிட்டார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. ஷகிலா கூறுவதைபோலவே, அது உண்மையிலேயே நாய்கறிதானா என்பதை அதிகாரிகள் உரிய முறையில் பரிசோதனை நடத்தி உறுதி செய்யலாம். இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள ஷகிலா மட்டுமின்றி, நாய் கறியை சாப்பிட்டிருப்போமோ என்ற அச்சத்தில் உள்ள சென்னைவாசிகளுக்கு உண்மை நிலை தெரிய வழி கிடைக்கும்.