காலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இடி மின்னலுடன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், வெப்பம் தணிந்து குளிர்ந்து சூழல் நிலவியது. இதனை கொண்டாடும் விதமாக, அய்யப்பாக்கம் பகுதியில் கேக் வெட்டி பொதுமக்கள் மழையை வரவேற்றனர்.
போதிய மழை இல்லாமல் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. மழை இல்லாததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு மாறியது.
சென்னையில், மழை எப்போது தலைகாட்டும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக, கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு, விட்டு மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில், இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர்
இதேபோன்று அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கனமழை பெய்தது. மழை காரணமாக சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கு எதிரே மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் முறிந்து விழுந்ததில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவும், காரும் சேதம் அடைந்தன.
இந்தநிலையில், மழையை வரவேற்கும் விதமாக, அயப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அயப்பாக்கம், மோரை, வீராபுரம், வெள்ளானூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. மழை நீரை சரியான முறையில் சேமித்து இருந்தாலே போதும், தண்ணீர் பஞ்சத்திற்கு இடமே இருந்திருக்காது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.