பெரிய மாற்றத்திற்கு பிளான்.. முதல்வர் களமிறக்கும் "Operation Decongestion".. சென்னைக்கு செம குட் நியூஸ்!
சென்னை: சென்னை போக்குவரத்தில் முக்கியமான சில மாற்றங்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Recommended Video
சென்னையில் கடந்த சில நாட்களாக சாலை பணிகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சாலைகளை முறையாக அகழ்ந்து, மில்லிங் பணிகள் செய்த பின்பே சாலைகள் போட வேண்டும் என்று அரசு தரப்பு உத்தரவிட்டுள்ளது.
அதாவது ஒரு சாலை மீது இன்னொரு சாலையை கோட்டிங் போல போடுவதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் சாலை பணிகளை கவனித்து வருகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலினும் கூட கடந்த போகி தினத்தன்று நேரடியாக களமிறங்கி சென்னையில் பல்வேறு இடங்களில் சாலை பணிகளை பார்வையிட்டார். அதேபோல் தமிழ்நாடு தலைமை செயலாளர் வெ இறையன்புவும் நேரடியாக சாலை பணிகளை பார்வையிட்டார்.
உ.பி. தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உ.பி. செல்வாரா?
உத்தரவு
சாலை மீது சாலை போட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறையாக மில்லிங் பணிகளை செய்த பின்புதான் சாலைகளை போட வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அரசு சார்பாக உத்தரவு போடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் சென்னையில் போக்குவரத்திலும் சில மாற்றங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக "Operation Decongestion" என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Operation Decongestion
அது என்ன "Operation Decongestion" என்ற அரசு தரப்பில் விசாரித்தோம். அதன்படி சென்னையை டிராபிக் குறைவான பெருநகரமாக மாற்ற பிளான் போடப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாலைகளை சரி செய்து இருக்கிறோம், இது போக சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் சில மாற்றங்களை செய்து டிராபிக் ஏற்படாமல் இருக்கும்படி மாற்ற போகிறோம் என்று கூறினார். அதன்படி சென்னையில் 13 முக்கியமான சந்திப்புகளை புனரமைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது.
சாலை சந்திப்புகள்
சென்னையில் ஜெமினி பிரிட்ஜ், ஈகா தியேட்டர், கொளத்தூர், மாதவரம், மீனம்பாக்கம், ஸ்பெசன்சர் பிளாசா, வடபழனி சந்திப்பு உள்ளிட்ட பல இடங்கள் அதிக டிராபிக் உள்ள இடங்கள் ஆகும். மொத்தம் 13 இடங்கள் அதிக டிராபிக் உள்ள இடங்களாக அரசு சார்பாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகள், சாலை டிராபிக், நீண்ட நேர வாகன முடக்கங்கள் எல்லாம் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 வருடங்களில் இந்த சாலைகளில் என்னென்ன நடந்தது என்ற கணக்கு மொத்தமாக எடுக்கப்பட்டுள்ளது.
மாற்றம்
இந்த புள்ளி அடிப்படையில் இந்த சாலைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி லேன் விதிகளை மக்கள் பின்பற்றும் வகையில் புதிதாக டிராபிக் ஐலாண்ட் கொண்டு வர உள்ளனர். அதாவது எந்த லேனில் எந்த வாகனம் செல்ல வேண்டும். பேருந்து எங்கே செல்ல வேண்டும். வேகமாக செல்லும் வாகனங்கள் எப்படி செல்ல வேண்டும் என்பது தொடர்பான புதிய லேன் கட்டுப்பாடுகளை இங்கே கொண்டு வர உள்ளனர்.
புதிய வசதிகள்
இதற்காக சென்னையில் பல சாலைகளில் traffic islands கொண்டு வர உள்ளனர். இது பெரிய அளவில் டிராபிக்கை குறைக்கும். லேன் மாறி மாறி பயணித்து அதனால் விபத்து, டிராபிக் ஏற்படுவதையும் இது தடுக்கும். மேலே குறிப்பிட்ட 13 சாலைகளில் தினமும் 4 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. எனவே இங்கு புனரமைப்பு பணிகளை செய்வதற்காக 18 கோடி ரூபாயை அரசு செலவு செய்ய உள்ளது. புதிய சில சிக்னல்களும் இங்கே கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேறு வசதிகள்
இது போக table-top speed breaker வகை ஸ்பீட் பிரேக்கர்கள் கொண்டு வரப்பட உள்ளது. சாலையிலேயே தார் மூலம் போடப்படும் ஸ்பீட் பிரேக்கர்கள் அகற்றப்பட்டு பைபர் மூலம் போடப்படும் ஸ்பீட் பிரேக்கர்கள் வைக்கப்படும். இதனால் விபத்துகள் பெரிய அளவில் குறையும். அதேபோல் சாலையில் கூடுதல் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. புதிய வகை விளக்குகள் கண்கள் கூசாத வகையில் பொருத்தப்படும். மேலும் பாதுகாப்பு சுவர்கள் இரண்டு பக்கமும் கட்டப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை முழுக்க விரைவில்
கடந்த 5 வருட சாலை புள்ளி விவரங்களை ஆராய்ந்து இந்த "Operation Decongestion" திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் வரும் காலங்களில் மொத்தமாக டிராபிக் குறையும். அதேபோல் விபத்துகள் பாதியாக குறையும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் வெற்றியை பொறுத்து சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.