கையைத் தூக்கு.. பிராமிஸ் பண்ணு.. ரூட்டு தலைகளை அள்ளி வந்து வாக்குறுதி வாங்கிய சபாஷ் போலீஸ்!
சென்னையில் ரூட்டு தல பிரச்சனையில் போலீசால் கைது செய்யப்பட்ட மாணவர்கள் நேற்று காவல் நிலையத்தில் உறுதிமொழி எடுத்த நிகழ்வு பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video
சென்னை: சென்னையில் ரூட்டு தல பிரச்சனையில் போலீசால் கைது செய்யப்பட்ட மாணவர்கள் நேற்று காவல் நிலையத்தில் உறுதிமொழி எடுத்த நிகழ்வு பெரிய வைரலாகி உள்ளது.
சென்னையில் ரூட்டு தல பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. பேருந்தில் கல்லூரி செல்லும் மாணவர்களில் யார் குறிப்பிட்ட ரூட்டை கட்டுப்படுத்துவது என்ற மோதல் மாணவர்கள் இடையே நிலவி வருகிறது.
ஒரு குறிப்பிட்ட பஸ் ரூட்டை கட்டுப்படுத்தும் மாணவர்களை ரூட்டு தல என்று அழைப்பார்கள். சென்னையில் 90க்கும் அதிகமான ரூட்டு தலகள் இருக்கிறார்கள்.
என்ன சண்டை
இந்த நிலையில்தான் மூன்று நாட்களுக்கு முன் கல்லூரி மாணவர்கள் சென்னையில் பேருந்தில் அடித்துக்கொண்டார்கள். யார் ரூட்டை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்று வந்த பிரச்சனையில் மாணவர்கள் பட்டா கத்தியால் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டார்கள். இது வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.
கைது செய்தனர்
இந்த சண்டையில் ஈடுப்பட்ட மாணவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதில் 5 மாணவர்களின் கைகள் உடைக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டதாக போலீசார் விளக்கம் அளித்து உள்ளனர். இந்த மாணவர்களை போலீசார் மிக கடுமையாக எச்சரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன செய்தனர்
இந்த நிலையில் ரூட்டு தல பிரச்சனையில் போலீசால் கைது செய்யப்பட்ட மாணவர்கள் நேற்று காவல் நிலையத்தில் உறுதிமொழி எடுத்த நிகழ்வு பெரிய வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், எந்த விரும்பத்தகாத செயல்களையும் செய்ய மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். எங்கள் பெற்றோர்களுக்கும் நல்ல பெயர்களை வாங்கி தருவோம் என்று உறுதியளிக்கிறோம்.
சட்டம் என்ன
தவறினால் சட்டப்படியான நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறோம் என்று உறுதியளிக்கிறோம், என்று உறுதிமொழி அளித்து இருக்கிறார்கள். அதேபோல் இவர்களிடம் இது தொடர்பாக வெள்ளை பேப்பரில் கையெழுத்தும் வாங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் 90 ரூட்டு தலகளை போலீசார் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது .