10, 12-ம் வகுப்புகளில் ஸ்கூல் பர்ஸ்ட் மார்க்.. ஆனால் நீட் தேர்வில் ஜீரோவாம்.. அம்பலமாகும் முறைகேடு
சென்னை: சென்னையில் 10,12-ம் வகுப்புகளில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் ஒருவர் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஜீரோ பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு பாழாகிறது என்பது ஒருபக்கம். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குழப்பங்கள், முறைகேடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நீட் தேர்வில் ஜீரோ
இந்த ஆண்டும் நீட் தேர்வு முடிவுகளில் பெரும் குழப்பமே ஏற்பட்டிருந்தது. பின்னர் சரி செய்துவிட்டதாக அறிவித்தாலும் குழப்பங்கள் ஓய்ந்தபாடில்லை. இப்போது சென்னை மாணவர் ஒருவர் நீட் தேர்வில் ஜீரோ வாங்கியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
10,12-ல் முதல் மதிப்பெண்கள்
சென்னையைச் சேர்ந்த மாணவ சாய் அக்சய், பத்தாம் வகுப்பில் 500க்கு 475 மதிப்பெண்கள் பெற்றார். 12-ம் வகுப்பில் 600க்கு 516 மார்க்குகள் பெற்றிருந்தார். இயற்பியலில் 76, வேதியியலில் 91, உயிரியலில் 88 மதிப்பெண்கள் பெற்றவர் சாக் அக்சய். ஆனால் நீட் தேர்வில் ஜீரோதான் கிடைத்திருக்கிறது என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
ஏதோ ஒரு முறைகேடு
இது தொடர்பாக மாணவர் சாய் அக்சய் கூறுகையில், ஆன்ஸர் கீ வைத்து நான் மதிப்பிட்ட போது எப்படியும் 520 மதிப்பெண்கள் கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் பூஜ்ஜியம்தான் வந்திருக்கிறது. விடைத்தாளில் ஏதோ முறைகேடு நடந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி என்கிறார்.
வெவ்வேறு கையெழுத்து
சாய் அக்சயின் உறவின் முத்துகுமார் கூறுகையில், நீட் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஓஎம்ஆர்சீட் வாங்கி பார்த்தோம். அது சாய் அக்சயுடையதே அல்ல. அந்த ஓஎம்ஆர் சீட்டில் ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கப்படாமல் இருந்தது. கையெழுத்தும் வெவ்வேறாக இருந்தன. நிச்சயம் முறைகேடு நடந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி என்கிறார்.