சென்னையில் பரபரப்பு.. திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்.. குழப்பத்தில் மக்கள்
Recommended Video
சென்னை: அழகான சென்னை கடற்கரைகள், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது. இரவாக இரவாக கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி திரும்ப தொடங்கியிருந்தனர்.
ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் காணப்பட்ட இரவு நேரம் அது. திடீரென ஈஞ்சம்பாக்கம் கடல் பகுதியில், வினோதமான ஒரு ஒளி மின்னியுள்ளது. முதலில் அதை நிலவு ஒளியின் 'எதிரொளி' என்றுதான் முதலில் மக்கள் நினைத்தனர்.
ஆனால், சற்று நேரத்திற்கு பிறகு, கடல் அலை நீல வண்ணத்தில் மின்னுவதை பார்த்து அவர்கள் அதிசயித்தனர். சிலர் பீதியடைந்தனர்.
திக் திக்
செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தி, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற திரைப்படத்தில் தீவுக்கு படகில் செல்லும்போது கடலில் இருந்து நீல நிற வண்ணம் மினுங்கும். பின்னர் ஒரு வகை மீன் வெளியே வந்து, படகில் பயணிப்போரை கடித்துக் கொன்றுவிடும். கடலில் நீல நிற வண்ணத்தை பார்த்த பல மக்களுக்கும் அந்த படத்தின் பயங்கர காட்சி நினைவுக்கு வந்தது. அவசர அவசரமாக பலரும் இடத்தை காலி செய்துவிட்டு, ஓட்டம் பிடித்தனர். சிலர் மட்டும், அங்கு என்னதான் நடக்கிறது என்பதை செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.
திருவான்மியூர் பீச்
அப்படி பதிவு செய்யப்பட்ட காட்சிகள்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவான்மியூர் பீச்சிலும் இதேபோன்ற கலர் தென்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மக்கள் மத்தியில் பரபரப்பையும், பல்வேறு ஐயப்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் பரவியதும், நேற்று இரவு திருவான்மியூர் கடற்கரையில் பெண்கள் மற்றும் இளைஞர்கள், திரண்டனர். கடல் அலைகள் நிறம் மாறியுள்ளதை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
ஆய்வாளர்கள்
"பல்வேறு உயிரினங்கள் இதுபோன்ற ஒளியை வெளியிடும் என்று அறியப்படுகின்றன, அவற்றின் ஒளிகள் உலகெங்கிலும் உள்ள கடல்களில் அவ்வப்போது காணப்படுகின்றன" என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கடல் உயிரியலாளரும், உயிரியக்கவியல் நிபுணருமான உட்லேண்ட் ஹேஸ்டிங்ஸ் கூறினார். நான் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடல் பகுதிகளை பார்த்துள்ளேன். மேலும் பயோலுமினென்சென்ஸ் எனப்படும் இந்த ஒளி இல்லாத ஒரு இடத்தையோ அல்லது பார்க்க முடியாத ஒரு இரவையோ நான் பார்த்ததில்லை, "என்று ஹேஸ்டிங்ஸ் தெரிவிக்கிறார்.
|
பாசியா, மாசுவா?
அதேநேரம், சென்னை கடலில் எழுந்த ஒளிக்கு காரணம், ஒரு வகை பாசி என கூறப்படுகிறது. அந்த பாசியை சாப்பிட வரும் சிறிய வகை மீன்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இப்படி ஒளியை உமிழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், சமீபத்தில் பெய்த மழையால், நைட்ரஜன் கலந்த மாசு, கடலில் கலந்திருக்கலாம். அது இப்படி ஒளிர்ந்திருக்கலாம் என்று தேசிய கடலோர ஆய்வு மையம் சந்தேகிக்கிறது. இதுதொடர்பாக அந்த மையத்தின் அதிகாரிகள் இன்று, ஆய்வு நடத்த உள்ளனர்.