இது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ
சென்னை: சென்னையில் திருட்டு பைக்கில் வந்து மொபைல்களை வழிபறி செய்யும் திருடர்களை பின்தொடர்ந்த எஸ்ஐ ஒருவர் பின்னர் தனி ஒருவராக போராடி 3 பேரை பிடித்தார். அவர்களிடம் இருந்து 11 திருட்டு மொபைல்களை பறிமுதல் செய்தார். இது தொடர்பான சிசிசிடிவி காட்சியை சென்னை மாநகர ஆணையர் மகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் வழிபறி திருடர்கள் அதிகம். எங்கு எப்போது வந்து கையில் உள்ள பணத்தை, நகையை, மொபைலை பறிப்பார்கள் என்பது தெரியாது. கவனமுடன் இல்லாதவர்களை குறிவைத்தோ அல்லது கவனத்தை திசை திருப்பியோ வழிபறி செய்து வருகிறார்கள்.
இவர்கள் திருடிய சமயத்தில் உடனே கையில் சிக்கினால் தான் வழிபறி செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. ஏனெனில் இவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிவிடுவார்கள். அவர்களின் அடையாளமும் தெரியாது. திருட்டு பைக்கில் வந்திருப்பார்கள்.
மகேஷ் அகர்வால்
இந்த சூழலில் வழிபறி செய்துவிட்டு தப்பி ஓடிய மொபைல் வழிபறி கொள்ளையர்களை துணிச்சலுடன் போராடி பிடித்துள்ளார் எஸ்ஐ ஆண்டலின் ரமேஷ். சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் அவரை வெகுவாக பாராட்டி உள்ளார்.
2 பேர் எஸ்கேப்
என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம். மணலி புதுநகர் எம்எம்டிஏ காலனியை சேர்ந்த ரவி (56), நேற்று முன்தினம் காலை மாதவரம் மேம்பாலம் அருகில் பைக்கில் வந்து கொண்டிந்தார். அப்போது, மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் இவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.
விடாமல் துரத்தினார்
அதிர்ச்சியடைந்த ரவி, கூச்சலிட்டபடி அவர்களை துரத்தினார். அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்டலின் ரமேஷ் இதை பார்த்து, தனது பைக்கில் கொள்ளையர்களை விரட்டினார். சினிமா காட்சி போல் போலீசிடம் சிக்காமல் கொள்ளையர்கள் வாகனத்தை ஓட்டிச் செல்ல, எஸ்ஐ விடாமல் துரத்திச் சென்று உள்ளார்.
விரட்டி பிடித்தார்
சாஸ்திரி நகர் அருகே கொள்ளையர்கள் சென்ற பைக் தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். உடனே, எஸ்ஐ அவர்களை பிடிக்க முயன்றபோது, ஒருவர் ஓட்டம் பிடிக்க, மற்றொருவர் மீண்டும் பைக்கில் தப்பிக்க முயன்றார்.அப்போது, எஸ்ஐ ரமேஷ் தனது பைக்கை கீழே போட்டுவிட்டு, பைக்கில் தப்ப முயன்ற நபரை மடக்கி பிடித்தார்.
சிறையில் அடைப்பு
விசாரணையில், சர்மா நகரை சேர்ந்த அருண்ராஜ் (20) என்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் தப்பிய மாத்தூரை சேர்ந்த நவீன்குமார் (23) மற்றும் அவரது நண்பர் ராயபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 செல்போன்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யதார்கள். மேலும் விசாரணையில், இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் ராயபுரம், மாதவரம் பகுதியில் 4 நபர்களிடம் தொடர்ச்சியாக செல்போன் பறித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களை சிறையில் அடைத்தனர். இதுபற்றி அறிந்த போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், எஸ்ஐயை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சினிமா காட்சி அல்ல
அவர் சிசிடிவி பதிவை வெளியிட்டுள்ளதுடன், அதற்கு மேல் பதிவில், இது ஏதோ சினிமா படத்தில் வரும் காட்சியும் அல்ல. ஆனால் நிஜ வாழ்க்கை ஹீரோ எஸ்.ஐ.அண்டிலின் ரமேஷ் தனி ஒருவராக போராடி திருடர்களை பிடித்தது. திருடப்பட்ட பைக்கில் சவாரி செய்யும் மொபைல் வழிபறி கொள்ளையர்களை பின்தொடர்ந்த ரமேஷ் அவர்களை பிடித்தார். இது மூன்று குற்றவாளிகளை கைது செய்ய வழிவகுத்தது மற்றும் 11 பறிக்கப்பட்ட மொபைல்களை மீட்டெடுக்க வழிவகுத்தது" என்று பாராட்டினார்.