ஜெயக்குமார் மகனுக்கு மீண்டும் ஜெயம் கிடைக்குமா.. தென் சென்னையில்?
ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் வரும் தேர்தலிலும் வெற்றி பெறுவாரா?
Recommended Video
சென்னை: தமிழகத்தின் முக்கியமான பாரம்பரிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று தென் சென்னை. பெரும் பெரும் தலைவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. ஆர். வெங்கட்ராமன், வைஜெயந்தி மாலா, டி.ஆர். பாலு என இந்த வரிசை பெரியது. இப்படிப்பட்ட தொகுதியின் தற்போதைய எம்.பி. அதிமுகவின் ஜெயவர்த்தன்.
இவருக்கு அறிமுகம் தேவையில்லை. பலமான பின்னணி, ஆழமான பின்புலம் என அரசியல் அறிமுகம் ஆனவர். ஆம்... அமைச்சர் ஜெயக்குமாரின் மகன்தான் ஜெயவர்த்தன். இவர் எம்பி பதவியில் அமர்ந்தது இது முதல் முறையாகும்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, ஜெயக்குமாரிடமிருந்து சபாநாயகர் பதவியை திடீரென பறித்த சம்பவம் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. சில சலசலப்புக்கு பின்னர் ஜெயலலிதா 4 எம்எல்ஏக்களின் வீட்டு கல்யாணங்களை ஒன்றாக நடத்தி வைத்தார். அதில் ஒன்றுதான் ஜெயவர்தனின் திருமணமும்.
சிட்லபாக்கம் ராஜேந்திரன்
இதற்கு பிறகுதான் தென் சென்னை தொகுதியின் அதிமுக வேட்பாளராக ஜெயவர்தன் அறிவிக்கப்பட்டார். பொதுவாக தென் சென்னையில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் யாராவதுதான் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள். அதன்படி முந்தைய தேர்தலில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வெற்றி பெற்றிருந்தார்.
டிகேஎஸ் இளங்கோவன்
ஆனால் இளைஞர் என்பதாலோ, அல்லது ஜெயக்குமாரின் மகன் என்பதாலோ தெரியவில்லை, மீனவ சமூகத்தை சேர்ந்த ஜெயவர்தனை ஜெயலலிதா திடீரென வேட்பாளராக அறிவித்தார். திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன் நின்றார். ஆனால் 1,36,625 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஜெயவர்தன்.
735 கேள்விகள்
இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி. படித்தவர். 31 வயதாகிறது. இதுவரை நாடாளுமன்றத்தில் 63 விவாதங்களில் பங்கெடுத்து உள்ளார். நாடாளுமன்ற வருகை பதிவும் 85 சதவீதமாக உள்ளது. தந்தையின் பெயரை காப்பாற்றும் நாடாளுமன்றத்தில் இவரது செயல்பாடு சிறப்பாகவே இருந்தது. கிட்டத்தட்ட 735 கேள்விகளை இவர் எழுப்பி உள்ளது பாராட்டத்தக்கது.
நல்ல போட்டியாக இருப்பார்
தொகுதிப் பக்கம் அடிக்கடி வரும் மக்கள் பிரதிநிதிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அரிய வகை அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். அடிக்கடி தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மத்தியில் தனது இருப்பை வெளிப்படுத்த இவர் தவறியதில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஜெயவர்த்தன் நிறுத்தப்படுவாரா என்பது தெரியவில்லை. ஒரு வேளை நிறுத்தப்பட்டால் நிச்சயம் எதிர் தரப்பு வேட்பாளருக்கு நல்ல போட்டியாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.