துரத்தும் அந்த ஒற்றை வழக்கு.. அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் புகார்தாரர்களின் வாக்குமூலங்களை பெறுவதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட இருவரை நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், 47 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நகல்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
இந்நிலையில், புகார்தாரர்களின் வாக்குமூலங்களைக் குற்றம்சாட்டப்பட்ட 47 பேருக்கும் அளிப்பதற்காக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆலிசியா முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து, புகார்தாரர்களின் வாக்குமூலத்தின் நகலைப் பெறுவதற்காக, அக்டோபர் 5 ம் தேதி நேரில் ஆஜராகும்படி செந்தில் பாலாஜி உட்பட இருவருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைத் தள்ளிவைத்தார்.