சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்த நாள சிகிச்சைக்கு அதிநவீன கருவி அறிமுகம்.. அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு இதயம் போன்றவர்கள் என்றும், யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். முன்னதாக ஸ்டாலின்லி அரசு மருத்துவமனையில் புதிய கருவி திறந்து வைக்கப்பட்டது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நுண் கதிரியல் துறையில் கேத் லேப்பை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். மேலும் மருத்துவமனையில் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கூறும்போது, நுண் கதிரியல் துறையில்
ரத்தநாளங்களில் ஏற்படும் வீக்கம், ரத்தகசிவு, அடைப்பு, ரத்தநாள வெடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு நுண்துளைகள் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அதிநவீன சிகிச்சை வழங்க 6.5கோடி மதிப்பில் பிப்லேன் டிஜிட்டல் சப்ஸ்ட்ராக்சன் ஆஞ்சியோகிராம் கேத்லேப் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த கருவி மூலம் மூளை, குடல் மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்த கசிவு, மற்றும் கல்லீரல் புற்றுநோய் உட்பட புற்றுநோய்களை தெளிவாக கண்டறிந்து, அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை வழங்கப்படும். அதுமட்டுமின்றி குறைவான மருத்துவ செலவில் மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
அதன்பின் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, இயற்கைக்கு இடர்பாடுகள் அளிக்கக்கூடிய மற்றும் சுகாதாரமற்ற நிலையை கொண்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கணவன் மனைவி போல் இருந்தது பிளாஸ்டிக் பொருட்கள், விவாகரத்து செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு இதயம் போன்றவர்கள். அவர்களை அரசு மதிக்கிறது. எனவே யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்ட வேண்டும் என்று எங்கள் எண்ணம் இல்லை.
சட்ட அமைச்சர் குற்றஞ்சாட்டி உள்ளார். அதுகுறித்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வேண்டும் என்று தான் விசாரணை வேண்டும் என்று தெரிவித்தோம். மேலும் ராதாகிருஷ்ணன் மீது தனிப்பட்ட முறையில் குற்றஞ்சாட்ட வேண்டும் என்று நோக்கம் இல்லை.
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார். முன்னதாக அமைச்சர்களை முதல்வர் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ் அமைப்பினர் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.