"நீ வண்டியை இறக்குடா".. இரவு முழுக்க டிராபிக்கில் திணறிய சென்னை சாலைகள்.. ப்பா எவ்வளவு கூட்டம்!
சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டதால் நேற்று சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Recommended Video
தமிழகம் முழுக்க நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையில் இருக்கும் மக்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்ப துவங்கி உள்ளனர்.
சென்னையில் தங்கி இருக்கும் லட்சக்கணக்கான தென்மாவட்ட மக்கள், டெல்டா மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அரசு பேருந்துகளிலும், கார், பைக்குகளில் கிளம்ப தொடங்கி உள்ளனர்.
நேற்று கோயம்பேடு
சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்ட லட்சக்கணக்கான மக்கள் நேற்று சென்னையின் பல்வேறு பேருந்து நிலையங்களில் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு, பெருங்களத்தூர் ஆகிய பேருந்து நிலையங்களில் பலர் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளி காற்றில் பறந்தது.
மக்கள் கூட்டம்
பேருந்து நிலையங்களில் மக்கள் முண்டி அடித்துக் கொண்டு நின்றதால், சுத்தமாக எங்கும் சமூக இடைவெளி விடப்படவில்லை. முக்கியமாக சில அரசு பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அனுமதிக்கப்பட்டதை விட அதிக பேர் கூடி, பேருந்துகளில் நெருக்கமாக நின்றபடி கூட்டம் கூட்டமாக சென்றனர்.
சென்னை சுற்றி
அதிக அளவில் பேருந்துகள், வாகனங்கள் நேற்று இயக்கப்பட்டதால் சென்னையை சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையை சுற்றி இருக்கும் சுங்க சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மக்கள் பலர் சென்றனர். இதனால் சென்னையையே விட்டு வெளியேறும் சாலைகளில் 2-3 கிமீ தூரத்திற்கு நெரிசல் ஏற்பட்டது.
எந்த இடம்
செங்கல்பட்டில் இருக்கும் கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் நகர், பரனுர் சுங்க சாவடி ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் இந்த முறை தனியார் ஆம்னி பேருந்துகளில் பெரிய அளவில் கூட்டம் இல்லை. கோயம்பேட்டில் இருக்கும் ஆம்னி பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நினைத்ததை விட குறைவாகவே இருந்தது.
கூட்டம் கம்மி
சென்னையில் வேலை பார்க்கும் பலர் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருவதால்.. தற்போது ஆம்னி பேருந்துகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் அரசு பேருந்துகளில் எப்போதும் போல கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் பலர் ''ரோடு என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா'' என்பது போல வாடகை கார் மற்றும் சொந்த காரை எடுத்துக் கொண்டு.. ஊருக்கு கிளம்பினார்கள்.
சமூக இடைவெளி
இதனால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொரோனாவிற்கு இடையே சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு மூலம் கடுமையான பிரச்சாரம் செய்யப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு கூடுதல் பேருந்துகளையும் இயக்கி இருந்தது.. ஆனாலும் சென்னையில் பல இடங்களில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது.