நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு
சென்னை: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா தமக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவபடிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. தமிழகத்தின் எதிர்ப்பை மீறி நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனால் தமிழகத்தின் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கானல்நீராகிப் போனது. இந்த விரக்தியில் அனிதா உள்ளிட்ட சில மாணவிகள் தற்கொலை செய்து மாண்டு போயினர்.
நீட் பயிற்சி மையங்களில் பல லட்சம் ரூபாய் பணத்தைக் கொட்டி ஆண்டுக் கணக்கில் தயாராகி மதிப்பெண் பெற்று மருத்துவபடிப்பில் சேர்ந்து வருகின்றனர். இது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாக இருப்பதால்தான் தமிழகமே எதிர்க்கிறது.
இப்படி நீட் தேர்வு குறித்து தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிற எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற சம்பவமாக நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் என்கிற செய்தி வெளியானது. தேனி மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வில் எழுதி வெற்றி பெற்ற மாணவரின் மதிப்பெண்களைப் பயன்படுத்தி சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்தார் என்கிற தகவல் வெளியானது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவமனை கல்லூரி நிர்வாகம், உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதிதான் என கண்டுபிடித்தது. அத்துடன் 5,000க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களும் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பி மாணவர் உதித் சூர்யா தலைமறைவாக ஓடிவிட்டார். அவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
தற்போது தமக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உதித் சூர்யா மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.