வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. மூட்டை முடிச்சுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் புறநகர் மக்கள்
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்கிறார்கள்.
நிவர் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை கொட்டி வருகிறது. இன்று மாலை அதி தீவிர புயலாக மாறும் என்பதால் மழையின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே புறநகர் பகுதிகளில் பேய் காற்றுடன் கனமழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இத்துடன் 50-க்கும் மேற்பட்ட ஏரிகளும் நிரம்பிவிட்டது.
சென்னை புறநகர் பகுதிகள் எப்படியிருக்கு?.. முட்டிக்கு மேல் வெள்ளநீர்.. இந்தாங்க ஒரு சாம்பிள் வீடியோ
குடியிருப்பு
இதனால் அதிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வெளியேற வழியில்லாமல் குடியிருப்புகளை சூழ்ந்தது. நேற்று மாலை முதலே புறநகர்ப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்துள்ளார்கள். இதனால் இரவு நேரத்தில் சமைக்க முடியாமல் வீட்டில் உள்ள பொருட்களை பத்திரப்படுத்தி வருகிறார்கள்.
அடையாள அட்டை
இன்னும் மோசமான கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பணம், நகை, அடையாள அட்டைகள், குழந்தைகளின் புத்தகங்கள் உள்ளிட்டவற்றுடன் மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகிறார்கள். இவர்கள் வேறு இடங்களில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு தஞ்சமடையத் தொடங்கிவிட்டார்கள்.
மழை ஓய்வு
நாளையும் மழை தொடரும் என்பதால் இந்த தண்ணீர் வடிய எப்படியும் ஒரு வாரம் ஆகும் என்பதால் அதுவரை வேறு எங்காவது தங்கிக் கொள்ளலாம் என மக்கள் முடிவு செய்துவிட்டு மழை அவ்வப்போது ஓய்வெடுக்கும் நேரங்களில் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.
செலவு
கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதித்த நிலையில் இந்த நிவர் புயலால் வீடுகளில் உள்ள அத்தியாவசிய பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் பாதிக்கப்பட்டு மேலும் செலவை ஏற்படுத்தும் எப்படி சமாளிப்பது என வேதனை தெரிவிக்கிறார்கள்.