சென்னை புறநகர்களில் போக்குவரத்து நெரிசல்... டோல்கேட்டுகளில் மணிக்கணக்கில் நிற்கும் பஸ்கள்!
Recommended Video
சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பேருந்துகள் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் செல்வதால் புறநகர் பகுதிகளில் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வரிசைகட்டி காத்துக்கிடக்கின்றன.
நவம்பர் 6ம் தேதி செவ்வாய்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொழில் நிமித்தமாக வெளி ஊர்களில் இருந்து சென்னை வந்து வசிப்பவர்கள் பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் இருந்தே வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு மட்டுமின்றி, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், சானிட்டோரியம், கே.கே.நகர் ஆகிய இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் புறப்பட்டுச் செல்கின்றன.
கோயம்பேட்டில் மக்கள் கூட்டம்
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து மட்டும் 11 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று முதலே விடுமுறை என்பதால் பலரும் நேற்று இரவு முதலே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதே போன்று தற்காலிக பேருந்து நிலையங்களை நோக்கியும் மக்கள் படையெடுத்ததால் வடபழனி 100 அடி சாலை, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தி. நகரில் கடைசி நேர ஷாப்பிங்
சென்னையில் இருந்து நேற்று முதலே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட தொடங்கியுள்ள நிலையில் இன்று காலை முதல் போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வந்துள்ளது. தீபாவளி ஷாப்பிங்கிற்காக மக்கள் அதிகம் செல்லும் தியாகராய நகரின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மற்றபடி சென்னைவாசிகளுக்கு வழக்கமாக இருக்கும் போக்குவரத்தில் இருந்து இன்று காலை சற்று நிம்மதி கிடைத்தது.
டோல்கேட்டுகளில் திணரும் வாகனங்கள்
சென்னை நகரில் அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாவிட்டாலும், புறநகர்ப் பகுதிகளில் அதிக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டுகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கின்றன.
டோல்கேட்டில் மணிக்கணக்கில் காத்திருப்பு
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையான மதுராந்தகத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல வாகனம் கிடைத்த போதும் டோல்கேட்டுகளில் பல மணி நேரம் காத்திருந்து செல்வது பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.