சென்னையில் 9 இடங்களில் கடைகள் மூட திடீர் உத்தரவு.. காலை திறந்திருந்து.. மாலையில் மூடப்பட்ட கடைகள்
சென்னை: சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கடைகளை அடைக்க மாநகராட்சி உத்தரவிட்ட நிலையில், தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் நேற்றைய தினம் திறந்திருந்த நிலையில் மாலை முதல் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கொரோன தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியால் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் முக்கிய பகுதிகளான ரங்கநாதன் தெரு , வடக்கு உஸ்மான் சாலை, மாம்பலம் , புரசைவாக்கம் , அமைந்தகரை, ஜாம்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 இடங்களில் கடைகள் மற்றும் வணிகவளாகங்கள், திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்களில் 50% பேருக்கு மேல்.. அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து..சென்னை மாநகராட்சி அதிரடி
பிறப்பிப்பு
இந்த தடை உத்தரவானது இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரும்பாலான இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் திறக்கப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த வியாபாரிகள் முன்னறிவிப்பின்றி கடைகளை திறக்க தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பலசரக்குகள்
கால அவகாசம் கொடுத்திருந்தால் பலசரக்குகளை கொள்முதல் செய்திருக்க மாட்டோம், திடீரென இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். திடீரென கடை அடைப்பு உத்தரவிட்டதால் நேற்று காலையில் மேற்குறிப்பிட்ட இடங்களில் கடைகள் திறந்து, மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சென்று கடைகளை மூடுமாறு உத்தரவிட்டதை அடுத்து மாலை முதல் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. இந்த கடைகள் தொடர்ந்து 10 நாட்களுக்கு மூடப்படும் என தெரிகிறது.
அதிக நாட்கள்
காய்கறி கடைகளில் காய்கறிகள், பழங்களை வாங்கி வைத்திருந்ததால் அப்பொருட்கள் அழுகும் நிலை உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்திருந்தனர். 10 நாட்கள் என்பது மிகவும் அதிக நாட்கள் என்றும் இதனால் கடைகளுக்கு செலுத்தும் வாடகை, மின் கட்டணம், குடும்பச் செலவு, ஊழியர்களுக்கு ஊதியம் ஆகியவற்றை கொடுக்க இயலாத நிலையில் உரிமையாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
மாஸ்க் அணிதல்
இது மட்டுமல்லாமல் எங்கெல்லாம் கூட்டம் கூடுகிறதோ அந்த இடங்கள் மூடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒரு சிலர் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருப்பதால் மற்றவர்களின் வாழ்வாதாரம் பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளது.