சென்னை மெரினாவில் பயங்கரம்.. தாய் குறித்து தப்பாக பேசிய டீ மாஸ்டர்.. கண்களை தோண்டி எடுத்து கொடூரம்
சென்னை: தன் தாயார் குறித்து தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த போதையில் இருந்த இளைஞர். தனது நண்பரான டீ மாஸ்டரின் இரண்டு கண்களையும் மது பாட்டிலால் குத்தி தோண்டி எடுத்ததால் சென்னை மெரினாவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் நீலிதநல்லூர் பலபத்திரராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக சக்கரவர்த்தி(29). இவர் டீ மாஸ்டர் ஆவார். இவர் திருவான்மியூரில் உள்ள டீக்கடை ஒன்றில் மாஸ்டராக வேலை செய்கிறார்.
இவரது நண்பரான அதே ஊரை சேர்ந்த பெரியபாண்டியன்(26) என்பவரும் தேனாம்பேட்டையில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
சண்டை வந்தது
இவருவரும் அடிக்கடி மெரினா கடற்கரைக்கு வந்து ஒன்றாக மது அருந்துவது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படித்தான் கடந்த மாதம் இருவரும் மெரினா கடற்கரை மணலில் மது அருந்தும்போது, பெரியபாண்டியன் அம்மா குறித்து தவறாக பேசி அவரது சேலையை பிடித்து இழுப்பேன் என்று அசோக சக்கரவர்த்தி கூறியிருக்கிறாராம். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் அசோகசக்கரவர்த்தி, பெரியபாண்டியனை அடித்திருக்கிறார்.
கடற்கரைக்கு அழைப்பு
இந்நிலையில், தனது தாய் குறித்து தவறாக பேசிய நண்பனை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு மீண்டும் பெரியபாண்டியன் மது குடிக்க நேற்று முன்தினம் இரவு அசோக சக்கரவர்த்தியை மெரினா கடற்கரைக்கு அழைத்திருக்கிறார். இருவரும் ராணிமேரி கல்லூரி எதிரே உள்ள கடற்கரையில் அமர்ந்து ஒன்றாக மது அருந்தி இருக்கிறார்கள்.
பாட்டிலால் குத்தினார்
அப்போது, பெரியபாண்டியன் எனது தாய் குறித்து தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று சக்ரவர்த்தியை மிரட்டியுள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெரியபாண்டியன் மது பாட்டிலை உடைத்து, கொலை செய்யும் நோக்கில் அசோக சக்கரவர்த்தியின் கழுத்தில் ஓங்கி குத்தி இருக்கிறார்.
பயங்கரம்
அப்போதும் ஆத்திரம் தீராக அவர், கீழே தள்ளி நெஞ்சில் ஏறி அமர்ந்து கொண்டு அசோக் சக்கரவர்த்தியின் இரண்டு கண்களையும் பாட்டிலால் குத்தி உள்ளார். அத்துடன் மேலும், அருகில் கிடந்த பிளாஸ்டிக் குச்சியால் இரண்டு கண்களையும் நோண்டியுள்ளார். அசோக சக்கரவர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு மெரினா கடற்கரையில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர்.
அடித்து உதைத்த மக்கள்
அப்போது பெரியபாண்டியன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே பொதுமக்கள் பிடித்து சரமாரியாக உதைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மெரினா போலீசாரிடம் பொதுமக்கள் பெரியபாண்டியனை ஒப்படைத்தனர். இரு கண்களிலும் ரத்த கொட்டிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அசோகசக்கரவத்தியை போலீசார் மீட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சென்னை அண்ணாசதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து போதையில் இருந்த பெரியபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.