சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை உடனே மூட உத்தரவு.. மாநகராட்சி அதிரடி
சென்னை: விதிகளை பின்பற்றாத காரணத்தால் சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை உடனடியாக மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி தொடங்கி தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. நான்கு முறை ஊரடங்கு இதுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட ஊரடங்கு மே 17ம் தேதி தொடங்கி மே 31 வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
4ம் கட்ட ஊரடங்கை தமிழக அரசு அறிவித்த போதே சில தளர்வுகளை அறிவித்தது. அதில் முக்கியமானது தனிக்கடைகளை திறக்கலாம் என்பது தான். அத்துடன் சிறிய கடைகள், ஏசி இல்லாத கடைகளையும் இயக்க அனுமதித்தது.
அதன்படி இரவு 7 மணி வரை தற்போது தமிழகத்தில் கடைகள் இயங்குகின்றன.அரசு கடைகளை இயக்க அனுமதி கொடுத்த போதே கொரோனாவை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடையில் உள்ளவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கூட்டம் சேர விடக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து இருந்தது.
புதுச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்வு
இந்நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தியாகராய நகர் ரங்கநாதன் தெரு பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அப்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது, கிருமிநாசினி தெளிக்காதது போன்ற சூழல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரங்கநாதன் தெரு பகுதியில் உள்ள கடைகளை எல்லாம் உடனடியாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து கடைகளும் அங்கு மூடப்பட்டன. சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது, கிருமிநாசினி தெளிக்காதது போன்ற காரணத்தால் கடைகளை மூட உத்தரவிட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது.
இந்நிலையில் கொரோனாவை தடுக்க எடுக்கப்படும் அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வியாபாரிகள் தெரிவித்தனர்.