அப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு
Recommended Video
சென்னை: சென்னை பேரூர் பகுதியில் 400 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டுள்ளது அரசு. ரூ.6078.40 கோடி செலவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.
சென்னையின் நடப்பாண்டு கோடை காலத்தில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக மழை இல்லாதது மற்றும் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது காரணமாக சென்னை நகர மக்கள் குடிநீருக்கு பரிதவித்தனர்.
சென்னை குடிநீர் பஞ்சம் செய்தி இந்தியா முழுக்க உள்ள முன்னணி மீடியாக்களில் வெளியானதோடு, பிபிசி, சிஎன்என், போன்ற சர்வதேச மீடியாக்களிலும் முக்கிய செய்தியாக இடம் பிடித்தது.
நிலத்தடி நீர் வற்றிப்போய் விட்டதால், கல் குவாரிகளில் இருந்து கூட தண்ணீரை எடுத்து வந்து பொதுமக்களுக்கு வினியோகிக்கும் நிலைக்கு மாநகராட்சி தள்ளப்பட்டது. அந்த தண்ணீரும் தீர்ந்துபோன நிலையில் வருணபகவான் கருணையால் மழை பெய்யத் தொடங்கி தற்போது தண்ணீர் பஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
சென்னையில் ஏற்கனவே இரண்டு கடல் நீரை குடிநீராக்கும் பிரிவுகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது பிரிவாக, காஞ்சிபுரம் மாவட்டம், பேரூரில் புதிதாக ஒரு திட்டம் தொடங்கப்படுகிறது. மொத்தம் 400 எம்எல்டி தண்ணீரை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டது இந்த பிரிவு. ரூ.6078.40 கோடி செலவில், ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படும்.
இந்த உற்பத்தி பிரிவால் தாம்பரம், பல்லாவரம், மாதம்பாக்கம், குன்றத்தூர் மற்றும் காட்டாங்குளத்தூர் போன்ற பகுதிகளில் கிட்டத்தட்ட 22.67 லட்சம் மக்களுக்களின் நீர் தேவை பூர்த்தி செய்யப்படும். மெட்ரோ வாட்டர் இதுபோன்ற சுத்திகரிப்பு ஆலைகளை நம்புவதற்கு பதில், சென்னை பெருநகரப் பகுதியில் நீர்நிலைகளை மீட்டெடுப்பதில் கவனம் வைக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.