சுதந்திர தினமான நேற்று.. சென்னையில் பைக் ஓட்டிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்.. ரூ.1000 அபராதம்
Recommended Video
சென்னை : புதிய மோட்டர் வாகன சட்டத்தின் படி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களிடம் சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று (சுதந்திர தினம்) முதல் ரூ.1000 அபராதம் வசூலித்தனர்.
விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் போக்குவரத்து விதிமீறல்களுக்கும், அஜாக்கரதை செயல்களும் அதிக அபாரதம் விதிக்கும் வகையில் மோட்டர் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. இந்த திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.
அதன்படி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் அபராத தொகை ரூ.100ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வில்லை என்றால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு கடந்த 7ம் தேதி முன் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவுப்படி நேற்று முதல் மாநகரம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டி வந்த நபர்கள் மீது ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், இரு சக்கர வாகனத்தில் பின்னால் ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களிடமும் அபராதம் விதிக்கப்பட்டது.
குறிப்பாக, சென்னையில் காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ் காந்தி சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உட்பட நகரம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய வந்த நபர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து புலம்பி சென்றதை காண முடிந்தது.