போக்குவரத்து விதியை காற்றில் பறக்கவிட்ட வாகன ஓட்டிகள்... 61 ஆயிரம் ஓட்டுனர் உரிமத்துக்கு ஆப்பு!
Recommended Video
சென்னை : சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 61 ஆயிரம் பேரின் உரிமத்தை பறிக்க வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.
போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களின் வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கடந்த ஜூலை மாதத்தில் தமிழக போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.
குறிப்பாக சென்னையில் போக்குவரத்து விதிமீறல் செய்வோர் விவரங்கள் கண்காணிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு வந்தன. சிக்னல்களை மதிக்காமல் வாகனத்தில் செல்லுதல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவிரைவாகச் செல்லுதல், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் அனைத்தும் போக்குவரத்து விதிமீறல்கள்.
இதே போன்று தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல் உள்ளிட்டவையும் போக்குவரத்து விதிமீறல்கள் என்று சட்டம் சொல்கிறது. இத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்ட சுமார் 61ஆயிரத்து 504 பேரின் ஓட்டுநர் உரிமங்களை நீக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குச் சென்னைப் போக்குவரத்துக் காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
2,917 பேர் அதிவிரைவாக வாகனத்தை ஓட்டியதாக போக்குவரத்து காவல்துறையின் பதிவுகள் சொல்கின்றன. 29ஆயிரத்து 32பேர் சிக்னல்களை மதிக்காமலும், 10 ஆயிரத்து 651 பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியுள்ளதாகவும், 8 ஆயிரத்து 810 பேர் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதாகவும் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. 430 பேர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக சரக்குகளை வாகனத்தில் ஏற்றியுள்ளதாகவும், 9 ஆயிரத்து 664 பேர் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்று விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும் வட்டார அலுவலகங்களுக்கு அனுப்பிய விவரத்தில் போக்குவரத்து காவல்துறை குறிப்பிட்டுள்ளது.