அடுத்த அதிரடி.. யூனிபார்மில் கேமரா பொருத்தம்.. சென்னை டிராபிக் போலீசாரின் புதிய நடைமுறை
Recommended Video
சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் போக்குவரத்து காவலர்களின் ஆடையில் கேமரா பொருத்தும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த கேமரா மூலம் காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகள் போக்குவரத்து போலீசார்கள் யார் யார்? எங்கு எப்படி வாகன சோதனையில் ஈடுபடுகிறார்கள். எப்படி பேசுகிறார்கள் என்பதை இருந்த இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும்.
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தது. அண்மையில் திருவான்மியூரில் கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் போக்குவரத்து போலீசாருடனான தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.
போலீசாருக்கு கேமரா ஆடை
இந்நிலையில் போக்குவரத்து காவல்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை இ-செலான் முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. போக்குவரத்து போலீசாரின் ஆடையில் கேமரா பொருத்தும் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
முதல்வர் தொடங்கி வைத்தார்
நேற்று தலைமைச் செயலகத்தில் 98 லட்சம் செலவில் 201 ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பழனிச்சாமி 7 போக்குவரத்து போலீசாருக்கு கேமரா பொருத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கேமரா ஆடையுடன் சோதனை
இதனை தொடர்ந்து நேற்று முதல் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 201 போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் தங்களது பணியின் போது கேமரா பொருத்திய ஆடையுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இடம் நேரம் தெரியும்
போக்குவரத்து போலீசாரின் ஆடையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கேமராவில் 2 எம்பி கேமராக்கள் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம். அந்த பதிவு எடுக்கப்பட்ட நேரம், இடம் ஆகியவற்றை தானாகவே அந்த கேமரா பதிவாக்கி கொள்ளும்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து
கேமராக்களில் பொருத்தப்பட்டுள்ள 4ஜி இணைப்பு மூலம் கேமராக்களின் வீடியோ பதிவுகளை, காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் நேரலையில் கண்காணிக்க முடியும். அத்துடன் போக்குவரத்து காவல் அதிகாரிகள் யார் யார்? எங்கு வழக்கு பதிவு செய்கிறார்கள் என்பதையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் வரைபடமாக காண முடியும்.
கேமரா திட்டத்தால் நன்மை
இந்த கேமரா திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், போலீசார் மற்றும் வாகன ஓட்டிகளிடையே ஏற்படும் தகராறுகள் முற்றுப்பெறும் என நம்பப்படுகிறது.