மாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம்! மத்திய அரசு சூப்பர் முடிவு
சென்னை: சென்னையில் மதுரவாயல்- துறைமுகம் இடையே 5 ஆயிரம் கோடியில் ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் உலக தரத்தில் கட்டப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மதுரவாயல்- துறைமுகம் இடையே பறக்கும் விரைவுச்சாலை திட்டத்திற்கு கடந்த 2010ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 2010ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட திட்டம், சுற்றுச்சூழல் விதிகளை காரணம் காட்டி தமிழக அரசால் 2012ல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு 2018ல் மீண்டும் பறக்கும் சாலை திட்டப்பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியபோது அன்றைய மதிப்பீட்டின் படி 1815 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக பறக்கும் சாலை தொடங்கி திட்டமிடப்பட்டது. பின்னர் நான்கு வழிச்சாலைக்கு பதிலாக ஆறுவழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடும் உயர்த்தப்பட்டது. ரூ.3100 கோடியில் இருந்து தற்போது திட்ட மதிப்பீடு ரூ.5000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரியில் முடிக்கப்படும்
இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை எம்.ஆர்.சி நகரில் நேற்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடைசியாக தமிழக முதல்வரை சந்தித்த போது சென்னையில் பல் முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கும் திட்டத்தில் இணையுமாறு வலியுறுத்தினேன் .தற்போது இந்தத் திட்டத்திற்காக சென்னை துறைமுகம் அருகே நிலம் ஒதுக்க தமிழக அரசு முன் வந்திருக்கிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 2021 ஜனவரிக்குள் முடிக்கப்படும்.
ஸ்ரீபெரும்புதூர் சாலை
தமிழக அரசு, கூடுவாஞ்சேரியில் இருந்து செட்டிபுலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 45- யை எட்டு வழி சாலையாக விரிவுபடுத்த கோரிக்கை வைத்திருக்கிறது.. அதேபோல் மதுரவாயலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை சாலையை விரிவுபடுத்தவும் கோரிக்கை வைத்துள்ளது. அவரிடம் நான் 700 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தேன்.
ஈரடுக்கு மேம்பாலம்
சென்னை துறைமுகத்திலிருந்து புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நான்கு வழி பறக்கும் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. மாநில அரசு இதற்கு மூன்று நுழைவு வாயில்கள் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் செலவு 3,100 கோடி ரூபாயாக உள்ளது. நாங்கள் 4 வழிக்கு பதிலாக ஆறு வழி சாலையாக இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்க முடிவு செய்துள்ளோம். இதன் காரணமாக இந்தத் திட்டத்தின் செலவு 5000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மாநில அரசு ஒப்புதல்
கூடுதல் செலவை ஈடுகட்டுவதற்காக இந்த மேம்பாலம் கட்டும் பணிகளுக்கு தேவையான எஃகு, சிமெண்ட் மற்றும் மணல் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி ரத்து செய்யப்படும். இதன் மூலமாக மத்திய அரசுக்கு 500 கோடி ரூபாய் வரை வரி இழப்பு ஏற்படும். மேலும், இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் பங்களிப்பு செய்ய முடிவு செய்திருக்கிறது. நிதி அமைச்சருடன் ஆலோசனை செய்துவிட்டு இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார். இந்த திட்டம் மூலம் சென்னை மக்களின் போக்குவரத்தும், சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு போக்குவரத்தும் எளிமையாக்கப்படும். மாநில அரசு ஒப்புதல் அளித்த பின்பு இதற்கான வடிவமைப்பு தயார் செய்யப்படும். இவ்வாறு கூறினார்.
ஈசிஆர் சாலை
ஏற்கனவே சென்னை பெங்களூரு நெடுஞ்சாலை விரைவுச்சாலை மேம்படுத்தும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் வேலைகள் முடிவடைந்துவிட்ட நிலையில், இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட உ.ளளது. இதேபோல் கூடுவாஞ்சேரி - பரனூர் இடையே ரூ.250 கோடி மதிப்பிலான 8 வழிச்சாலைத் திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. இதேபோல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழிச் சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நிலம் எடுப்பு பணிகள் நடந்து வருகிறது.