ஸ்டேஷனுக்கு வராதீங்க.. அங்க வந்து குடுங்க.. மீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி கைது
லஞ்சம் வாங்கிய அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்
சென்னை: "ஸ்டேஷனுக்கு வராதீங்க.. அந்த கோயில் கிட்ட வந்துடுங்க" என்று பாதிக்கப்பட்டவரை வரவழைத்து 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கி உள்ளார் இன்ஸ்பெக்டர் தமிழழகன்!
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரபாகர் மற்றும் சுப்பிரமணியன். இதில், சுப்பிரமணியன் ஓய்வு பெற்ற ரயில்வே போலீஸ். அதேபோல, பிரபாகர் ரியல் எஸ்டேட் செய்து வருபவர்.
இவர்களுக்குள் இடம் சம்பந்தமான விவகாரம் நடந்து வருகிறது. இருவரது பஞ்சாயத்தும் ஒரு முடிவுக்கு வராததால், சுப்பிரமணியன் வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் தமிழழகனிடம் முறையிட்டுள்ளார்.
உடனே தமிழழகனும் பிரபாகரனை அழைத்து கட்டப்பஞ்சாயத்து பண்ணி மிரட்டி உள்ளார். பின்னர் பிரச்சனையை சுமூகமாக முடித்து வைக்கிறேன் என்று சொல்லி 1 லட்சம் ரூபாய் லஞ்சமாகவும் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.
காதலிப்பியா மாட்டியா.. கழுத்தில் கத்தியை வைத்த இளைஞன்.. பதறி போன சத்தியமங்கலம்
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தமிழழகனை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். 20 ரூபாய் பணம் முதற்கட்டமாக தருவதாக பிரபாகரனை விட்டு தமிழழகனிடம் பேச சொன்னார்கள். அதன்படியே பிரபாகரனும், தமிழழகனிடம் "இப்போ 20 ஆயிரம் தரேன்.. வாங்கிக்குங்க.. மீதி அப்பறம் தரேன்" என்று சொல்லி உள்ளார்.
அதற்கு தமிழழகன், "ஸ்டேஷனுக்கு வராதீங்க.. அண்ணா நகர் போலீஸ் குவார்ட்டஸில்தான் என் வீடு இருக்கு.. அங்க ஒரு கோயில் இருக்கு.. அங்க வந்திடுங்க" என்று சொன்னார். அதன்படியே லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயன பவுடர் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பிரபாகரனிடம் கொடுத்து அனுப்பினர்.
பின்னர், ரூ.20 ஆயிரம் பணத்துடன் குவார்ட்டர் அருகே உள்ள கோயிலுக்கு தமிழழகன் வரவும், அந்த பணத்தை தந்தார். அப்போது மறைந்துதிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்து, அண்ணா நகர் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் உள்ள தமிழழகன், ஏற்கனவே இப்படித்தான் லஞ்சம் வாங்கிதால், கோயம்பேடு ஸ்டேஷனில் இருந்து அண்ணாநகர் ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர். இப்போது திரும்பவும் அதே வேலையை காட்டி உள்ளது பரபரப்பை தந்துள்ளது.