வியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்
சென்னை: சென்னை வியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரர் கடந்த வியாழக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
வியாசர்பாடி சி.கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரா.ஜெயக்குமார் (40) ரயில்வேயில் பார்சல் பிரிவில் ஒப்பந்தப் பணி செய்து வந்தார். இவர் வியாசர்பாடி எஸ்.எம். சாலையில் வியாழக்கிழமை நடந்து சென்றபோது மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் வியாசர்பாடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஜெயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஜெயகுமார் உயிரிழந்தார்.
கொலையாளிகளை கண்டறிய அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். வியாசர்பாடியில் ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வியாசர்பாடி, பள்ளதெருவை சேர்ந்த விக்னேஷ்வரன் வயது 28, நேரு நகரை சேர்ந்த ஜெபா (எ ) ஜெபராஜ் வயது 25, திவாகர் வயது 25 ஆகிய 3 பேரை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர் . மேலும் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான விஜயதாஸை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.