மழை வந்தாலும் மோசம்... மழை வராட்டியும் மோசம்... சென்னைக்கு தண்ணீரில் கண்டம்
Recommended Video
சென்னை: நடிகர் விவேக் ஒரு படத்தில் தனக்கு தண்ணீரில் கண்டம் இருப்பதாக சொல்லி புலம்புவார். அப்படித்தான் சென்னையும் தண்ணீர் கண்டத்தில் சிக்கி தவித்து வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை ஒரு நாள் ஓங்கி அடித்து மழை பெய்தாலும் பாதிக்கப்படுகிறது. ஒரேடியாக பெய்யாமல் போனாலும் பாதிக்கப்படுகிறது. இதனால் தான் தண்ணீர் எப்போதுமே கண்டமாக சென்னைக்கு இருக்கிறது.
வந்தாரை வாழவைக்கும் ஊரான சென்னைக்கு, வற்றாமல் ஓடும் ஜீவநதி என இப்போதும் எதுவும் இல்லை. அடையாறும், கூவமும் சாக்கடையாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை சரி செய்ய வேண்டுமானால் சென்னை முழுவதும் கழிவுநீர்கள் செல்லும் பாதைகளின் அடிப்படை கட்டமைப்பையே மாற்ற வேண்டும் என்பதால் அது சாத்தியமே இல்லை.
இலவசமாக மடிக்கணினி, ஆடு,மாடு கொடுக்கிறார்கள்.. தண்ணீரை விற்கிறார்கள்.. சீமான் காட்டம்
இதனால் மழை வந்தால் அடைப்புக்கு உள்ளான சாக்கடைக் குளம் போல் சென்னை நகர சாலைகளும் வீடுகளும் மாறிவிடுகின்றன.
தண்ணீர் லாரிக்கு தவம்
அதேநேரம் சென்னையில் மழை வராமல் போனால், நிலத்தடிநீர் மட்டம் சரிந்து தண்ணீர் தேடி மக்கள் அலையும் அவல நிலையும் ஏற்படுகிறது. இப்போது மழை இல்லாத காரணத்தால் நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துவிட்டது. போரில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் லாரிகளுக்காக மக்கள் தவம் இருக்கிறார்கள்.
சிமெண்ட் கிணறுகள்
கிணறுகள் போல், தண்ணீர் தொட்டிகளை வீடுகளுக்கு அடியில் அமைத்த மக்கள் பலர் அந்த கிணற்றுக்கு மழை நீரை சேர்க்கும் வண்ணம் பைப் லைன்களை அமைக்கவில்லை. அதேநேரம் சிமெண்ட் தொட்டியை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக பலரும் மாற்றியமைக்கவில்ல. இதன் விளைவாக தண்ணீர் பஞ்சத்தில் மக்கள் தவிக்கிறார்கள். குடிப்பதற்கு ரூ40 கொடுத்து வாட்டர் கேன் வாங்கும் மக்கள், இப்போது குளிக்கவும் கேன் வாங்கி பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
சிலரே சேமிக்கிறார்கள்
அதேநேரம் குடிநீரின் தேவையை உணர்ந்த ஒரு சிலரே மழைநீர் சேகரிப்பை உணர்ந்து செயல்பட்டு சேகரித்து வைத்துள்ளார்கள். இதனால் தண்ணீரை சேகரிக்காதவர்கள் இப்போது தவித்து வருகிறார்கள். சென்னையில் பலர் வாடகைக்கு குடியிருப்பதால், அவர்களுக்கு இத்தகைய தண்ணீர் சேமிப்பு என்பது சாத்தியம் இல்லை என்று சொல்லலாம்.
2 நாளைக்கு ஒருமுறை
உண்மை தான், தினசரி தமிழ்நாட்டில் எங்குமே தண்ணீர் வாராத நிலையில் சென்னைக்கு மட்டும் எவ்வளவு வறட்சியான காலத்திலும் இரண்டு நாளைக்கு ஒருமுறையாவது தண்ணீர் வந்துவிடும். எனவே வரும் தண்ணீரை பார்த்து சிக்கனமாக பயன்படுத்துவதே இப்போதைக்கு பாதுகாப்பு. மற்றபடி வேறு எதுவும் செய்ய இயலாது.
சென்னைக்கு கண்டம்
இடம் இல்லை, வசதி இல்லை என்ற சாக்கு போக்குகளை சொல்வதை நிறுத்திவிட்டு ஒவ்வொரு வீட்டு உரிமையாளர்களும் மழைநீர் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். இதேபோல் அரசும் தண்ணீரை சேமிக்கவும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை இன்னும் மேம்படுத்தவும் முயற்சிக்க வேண்டும். இந்த இரண்டையும் அரசும் , மக்களும் செய்யாவிட்டால் தண்ணீர் என்றைக்குமே சென்னைக்கு கண்டமாகவே இருக்கும்.