அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை: வேலூரில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான வட மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று மதியம் அளித்த பேட்டியில் கூறியதாவது: வளிமண்டல மேல் அடுக்கில் காணப்படும் காற்றின் சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேலூரில் 17 சென்டி மீட்டரும், கடலூரில் 13 சென்டி மீட்டரும், அரியலூரில் 12 சென்டிமீட்டர், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 11 சென்டிமீட்டர், விழுப்புரத்தில் 10 சென்டிமீட்டர், சென்னையில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழை தொடரும்.
மீனவர்களுக்கு தனிப்பட்ட எச்சரிக்கை எதுவும் கிடையாது. அந்தமான் கடல் பகுதியில் தான் காற்றின் வேகம் இருக்கிறது. எனவே மீனவர்கள் மீன்பிடிக்க எந்த தடையும் இல்லை.
சென்னையை சூழ்ந்துள்ள சிவப்பு தக்காளிகள்.. வேலூரில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டும் மழை.. வெதர்மேன்!
அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 செ.மீ மழை பெய்தது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது. உறுதி செய்த பிறகு அது தொடர்பாக நாங்கள் கருத்து தெரிவிப்போம்.
நீலகிரியில் தற்போது கன மழை இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை அளவு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.