பெண்களுக்கு சம உரிமை.. கேரளத்துக்கு ஆதரவாக சென்னையிலும் வனிதா சுவர் "கட்டிய" பெண்கள்
சென்னை: பெண்களுக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் மதில் என்ற மனித சங்கிலி நிதழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து சென்னை முகப்பேர் மேற்கில் பெண்கள் கைகளை கோர்த்து கொண்டு சங்கிலி தொடர் போல் நின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த விடாமல் மற்ற கட்சியை தடுத்து நிறுத்தி வருகின்றனர். கோர்ட் உத்தரவை அமல்படுத்த கோரி திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை 620 கி.மீ. நீளத்திற்கு இந்த மனித சங்கிலி நேற்று நடைபெற்றது.
என்னதான் சபரிமலைக்கான போராட்டம் என்கிற போதிலும் பெண்கள் சம உரிமை என்ற வார்த்தையையே முன்னெடுத்துள்ளனர். இந்த சங்கிலியில் இடதுசாரி பெண்கள் அமைப்பினர் ஆதரவு அளித்தனர். சபரிமலையை காப்போம், பாரம்பரியம் காப்போம் என பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் போராட்டத்துக்கு இது தக்க பதிலடியாக கருதப்படுகிறது.
மனித சங்கிலி
இத்தகைய போராட்டம் நடத்தப்பட்ட வேளை, இன்று இரு பெண்கள் அதிகாலை சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கேரளத்தில் நடந்த பெண்கள் மதிலுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை முகப்பேரில் பல்வேறு பெண்கள் கலந்து கொண்ட மனித சங்கிலி நடைபெற்றது.
நுழைய விடாமல்
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கோயிலாக இருந்தாலும் சரி பொது இடமாக இருந்தாலும் வேறு எந்த இடமாக இருந்தாலும் சரி பெண்களை அங்கே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தக் கூடாது.
முயற்சி
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக , கோயிலுக்குள் நுழையும் பெண்களின் உரிமையை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சமம்
சட்டத்தின் முன்பும் சமுதாயத்தின் முன்பும் அனைவரும் சமம் என்ற சமூக நீதியை நிலைநாட்ட கேரளத்தை ஆளும் அரசின் நடவடிக்கையை குறிப்பாக சபரிமலைக்கு வரும் பெண்கள் ஆதரவாக உள்ள முதல்வர் பினராயி விஜயனை பாராட்டியே ஆக வேண்டும்.
ஆச்சரியம்
கேரளத்தில் நடைபெற்ற வனிதா மதில் நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை முகப்பேரில் சம உரிமையில் நம்பிக்கை கொண்ட பெண்கள் அமைப்பினர், தனி நபர்கள் கலந்து கொண்டனர். நாங்கள் மொத்தம் 50 முதல் 60 பேர் வரை உள்ளோம். எங்களுக்கு போலீஸார் அனுமதி கொடுக்காதது ஆச்சரியத்தை அளிக்கிறது.
ஆளும் கட்சியினர்
எத்தனையோ மத வழிப்பாடுகள், மத ரீதியிலான கூட்டங்கள், விழாக்களுக்கு அனுமதி கொடுக்கும் போலீஸார் இதற்கு கொடுக்கவில்லை. அதிமுகவினர், பாஜகவினர் நடத்தும் போராட்டங்களையும் பொதுக் கூட்டங்களையும் அனுமதி பெறாமலேயே நடத்துகின்றனர் என்றார் வாசுகி.