ஆன்லைன் படிப்பின் போது மலர்ந்த காதல்.. கேரள பெண்ணை மணம் முடித்த சென்னை இளைஞர்..தேடி வந்த கேரள போலீஸ்
சென்னை: ஆன்லைன் பட்டப்படிப்பு படித்த போது சென்னை இளைஞருக்கும் கேரள இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் சென்னையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த காமேஷ்வரன் என்பவருக்கும் கேரளாவை சேர்ந்த சுஜிதா என்பவருக்கும் ஆன்லைன் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் பட்டப்படிப்பு ஒன்றை இருவரும் படித்த போது இவர்களுக்குள் அறிமுகம் ஆனதாகவும் நாளடைவில் இவர்களுக்குள் காதல் மலரந்ததாகவும் கூறப்படுகிறது.
திருமணத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு
இருவரும் தொடர்ந்து செல்போன்கள் மூலமும் பேசிக்கொண்டு தங்கள் காதலை வளர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த காமேஷ்வரனும் சுஜிதாவும் தங்கள் விருப்பதை வீட்டில் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், இருவருடைய வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த காதல் ஜோடி, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கின்றனர்.
வீட்டை விட்டு ஓடி வந்த கேரள பெண்
இதற்காக கேரளாவில் இருந்து வீட்டிற்கு தெரியாமல் சுஜிதா, சென்னைக்கு கிளம்பி வந்து இருக்கிறார். சென்னையில் வைத்து காமேஷ்வரன் சுஜிதாவை பதிவுத்திருமணம் செய்து இருக்கிறார். இதற்கிடையில் மகளை காணவில்லை என்று சுஜிதாவின் பெற்றோர் கேரளாவில் உள்ள திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுஜிதாவின் செல்போன் சிக்னலை வைத்து தேடி வந்துள்ளனர்.
காவல் நிலையத்தில் தஞ்சம்
இதை அறிந்த காமேஷ்வரன் - சுஜிதா ஜோடி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதற்கு இடையில், பெண்ணை அழைத்துச் செல்ல கேரள போலீசாரும் திருவொற்றியூர் போலீஸ் நிலையம் வந்து இருக்கின்றனர். ஆனால், சுஜிதா தனது காதலனை விட்டு செல்ல முடியாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். மேலும் காதல் ஜோடியினர் போலீசிடம் தங்களை சேர்த்து வைக்க கோரி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
வாட்ஸ் அப் கால் மூலம்
இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இந்த விவகாரம் குறித்து நீதிபதியிடம் வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்டு இருக்கின்றனர். நடந்த சம்பவத்தை நீதிபதியிடம் போலீசார் எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் மேஜர் என்பதால் திருமணம் செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காதலன் காமேஷ்வரனுடன் சுஜிதாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
சுஜிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அவரைத்தேடி கேரள போலீசார் திருவொற்றியூர் வருகை தந்த நிலையில், காமேஷ்வரனை விட்டு பிரிய சுஜிதா விடாப்படியாய் இருந்த சம்பவமும் அதைத்தொடர்ந்து நீதிபதியை போலீசார் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு அதன் மூலம் இந்த விவகாரத்திற்கு தீர்வு கிடைத்த விவகாரமும் திருவொற்றியூர் காவல் நிலையப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.