சென்னைக்கு மீண்டும் வரும் ஃபோர்டு..மறைமலை நகரில் இருந்து உலகத்திற்கு பறக்க போகும் சூப்பர் விஷயம்
சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு, மறைமலை நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் உற்பத்தி ஆலையை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளதாகவும், மீண்டும் கார்களை மறைமலை நகர் ஆலையில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கு திட்டங்களை இறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மறைமலை நகரில் ஃபோர்டு ஆலை மீண்டும் உற்பத்தியை தொடங்குவது குறித்து அண்மையில் தமிழக அரசிடம் அந்த நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்தார். தமிழகத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகரில் இயங்கி வந்த ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் இயங்க வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில் தமிழ்நாடு. ஃபோர்டு நிறுவனம் இடையே இருந்து வந்த 30 ஆண்டுகால உறவைப் புதுப்பிக்கும் வகையில் மறைமலை நகரில் மீண்டும் தொழிற்சாலை இயக்கப்படும் என கடந்த ஆண்டு ஃபோர்டு நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி, ஃபோர்டு நிறுவனம், ஆலையை மீண்டும் இயக்குவதற்கு இசைவாணை கோரி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தது. தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவு ஆணை கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் காலாவதியான நிலையில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இசைவாணையை 2028 மார்ச் 31 வரை புதுப்பித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மறைமலை நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் உற்பத்தி ஆலையை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிட போகிறதாம் ஃபோர்டு நிறுவனம். ஃபோர்டு சென்னை ஆலையில் இன்ஜின்களை தயாரிக்கப் போகிறது என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி மறைமலைநகர் சென்டரை உலகளாவிய கார் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட உற்பத்திக்காக மீண்டும் பயன்படுத்தவும், இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு இன்ஜினை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க கார் தயாரிப்பாளரான ஃபோர்டு 2021ம் ஆண்டு இந்தியாவில் வாகன உற்பத்தியை நிறுத்தியது. அதன்பின்னர் 2022ம் ஆண்டு மொத்தமாக வெளியேறியது . தெற்காசிய வாகன சந்தையில் அதன் 25 ஆண்டுகளாக சந்தையில் முக்கியமான பங்கு வகித்த ஃபோர்டு நிறுவனம் சென்னையில் ஆலையை நிறுத்தியது தமிழக வாகன ஆர்வலர்கள் பலரையும் கவலைக்குள்ளாக்கியது.
சென்னை மறைமலைநகர் ஆலையை மீண்டும் நடத்துவது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. சமீபத்திய ஊகங்கள் ஃபோர்டு அதன் இந்தியத் திட்டங்களைக் கைவிடக்கூடும் என்றே கூறின. குறிப்பாக டிரம்ப் நிர்வாகத்தின் உள்நாட்டு உற்பத்தி முயற்சிகள் மற்றும் இறக்குமதி வரிகளை அமல்படுத்துவதைக் கருத்தில் கொண்டு ஆலையை மூடுவதற்கே வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக "ஃபோர்டின் மூத்த நிர்வாகிகள் இன்ஜினை மட்டும் தயாரிப்பது என்று முடிவுக்கு வந்துள்ளார்களாம். ஏற்றுமதி சார்ந்த திட்டங்கள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், முறையான அறிவிப்புகள் விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஃபோர்டின் இந்திய டீலர்ஷிப் நெட்வொர்க் மூடப்பட்டதால், அது ஏற்றுமதியில் மட்டுமே கவனம் செலுத்தும் என்று தொழில்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்












Click it and Unblock the Notifications